தாய்லாந்தின் பாங்காக் நகரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் உலக ஹிந்து மாநாடு 2023 பிரம்மாண்டமாகத் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
‘ஜெயஸ்ய ஆயத்னம் தர்மா’ (தர்மம், வெற்றியின் உறைவிடம்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு, இந்துக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சவால்களை எதிர்கொள்ளவும், சாதனைகளை கொண்டாடவும், செழுமை மற்றும் நீதி, அமைதிக்கான பொதுவான லட்சியத்தை சாதிக்கவும் வழிசெய்கிறது.
உலகம் முழுவதுமுள்ள ஹிந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் “உலக இந்து மாநாடு 2023” இன்று தொடங்கி 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத், மாதா அமிர்தானந்தமயி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
மேலும், ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, விஞ்ஞானியும் எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றுகிறார்கள். தவிர, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறங்காவலர் மற்றும் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஏ ஷா, பாரதத்தின் மிகப்பெரிய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களும் ஸ்கன்ரே டெக்னாலஜி நிறுவனர்களுமான விஸ்வபிரசாத் ஆல்வா, ஸ்டான்போர்ட் உள்ளிட்ட வல்லுநர்களின் பேச்சுக்களும் இடம்பெறுகிறது.
அதேபோல, பல்கலைக்கழக பேராசிரியர் அனுராக் மைரல், நேபாள கோடீஸ்வரர் உபேந்திரா மஹதோ, பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் ஃபகர் ஷிவா கச்சி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில், உலக இந்து பொருளாதார மன்றம், இந்து கல்வி மாநாடு, இந்து ஊடக மாநாடு, இந்து அரசியல் மாநாடு, இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து அமைப்புகள் மாநாடு உட்பட 7 விதமான தலைப்புகளில், இணை மாநாடுகளும் நடைபெறுகின்றன.
60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாடு, இந்து சமூகத்தின் முன்பிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராயவும், விவாதிக்கவும் ஒரு விரிவான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மேலும், இந்து ஊடக மாநாடு, விவாதப் பொருட்களை வடிவமைப்பதில் ஊடகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
செய்தி ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் போலி விவாதப் பொருட்களை எதிர்கொள்ளுதல், பேச்சு சுதந்திர பிரச்சனைகள், சினிமாவை மறு கட்டமைப்பு செய்து மீட்டெடுத்தல், பொழுதுபோக்குத் துறையில் உள்ள இந்துக்களுக்கு எதிரான வெறுப்புநிலையை எதிர்கொள்ளுதல், தீவிர இடதுசாரித்தனத்தை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும்.
இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து மறுமலர்ச்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆக்கப்பூர்வ பங்களிப்புகளை அங்கீகரிக்கும். இந்துக் கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். பிற மதத்தினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருக்கும் கோவில் நிலங்களை மீட்க வேண்டும்.
உலகம் முழுவதும், இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். உலகளாவிய இந்துக்களிடம் பொதுவான பார்வை மற்றும் லட்சியத்தை உருவாக்குவதே மாநாட்டின் சாராம்சம். மாநாடு, ஒரு மகத்தான பயணத்தின் தொடர்ச்சியாகும். இது, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் ஒற்றுமையை பறைசாற்ற இருக்கிறது.
மகிழ்ச்சியையும், அமைதியையும் உலகம் பெற பாரதம் வழிகாட்டும் என மக்கள் நம்புகின்றனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடந்த ‘உலக ஹிந்து காங்கிரஸ் 2023’ மாநாடு இன்று( நவ.,24) முதல் நவ.,26 வரை நடக்கிறது.
இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
உலகம் ஒரே குடும்பம். பொருள், மகிழ்ச்சிக்கான அனைத்து வழிகளையும் கையகப்படுத்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கின்றனர். இதனை நாம் அனுபவித்து உள்ளோம்.
இன்றைய உலகம் தடுமாறி கொண்டு உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக மகிழ்ச்சி, பேரின்பம், அமைதியைக் கொண்டு வர மனிதர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர். கம்யூனிசம், முதலாளித்துவத்தையும் முயற்சி செய்தனர். பல்வேறு மதங்களை வழிபட்டனர். அவர்கள் பொருட்களின் செழிப்பை அனுபவித்தனர். ஆனால், திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லை.
கோவிட் காலத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் சிந்திக்கின்றனர். மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற பாரதம் வழிகாட்டும் என உலகம் நம்புகிறது. பாரதத்தில் அதற்கான பாரம்பரியம் உள்ளது. இதனை முன்னரே பாரதம் செய்துள்ளது. இந்த நோக்கத்திற்காக தான் நமது சமூகமும், நாடும் உருவானது.
சில மாதங்களுக்கு முன்பு, உலக முஸ்லிம் கவுன்சில் அமைப்பின் பொதுச்செயலாளர், பாரதம் வந்த போது, உலகில் நல்லிணக்கம் நிலவுவதற்கு பாரதம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். அதுவே நமது கடமை. இதற்காக தான் ஹிந்து மதம் உருவானது… என்று மோகன் பகவத் பேசினார்.