spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா370 நீக்கம் செல்லும்; மத்திய அரசின் முடிவுக்கு பெரும் வெற்றி: உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

370 நீக்கம் செல்லும்; மத்திய அரசின் முடிவுக்கு பெரும் வெற்றி: உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

- Advertisement -

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், 2024 செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி, மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்டது. அதேபோல், அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவு, நிரந்தர குடியுரிமை வழங்குவது தொடர்பாகவும் சில சிறப்பு உரிமைகள் சலுகைகள் அளிப்பதாகவும் இருந்தது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் கடந்த ஆகஸ்ட் 5, 2019ல் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டிச.11 இன்று தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி தீர்ப்பை எதிர்பார்த்து, இன்று பரபரப்பு தொற்றிக் கொண்டது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: 3 விதமான தீர்ப்புகள்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு தீர்ப்பை வழங்கினர். மூன்று தீர்ப்புகள் இருந்தாலும், ஒரே தீர்ப்பாகதான் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

1) ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது

2) குடியரசு தலைவர் ஆட்சி இருக்கும்போது, மாற்ற முடியாத முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்ற வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றன

3) குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கலாம் – என்றார் தலைமை நீதிபதி.

ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்க முடியாது என்று தெளிவாகக் குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.

குடியரசுத் தலைவர் ஆட்சி

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானதுதான் என்ற முடிவுக்கு வருகிறோம்.

அவசரச் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது அரசியலமைப்பில் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் உள்ளடங்கியதுதான் காஷ்மீர்.

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது; அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லும். அதன்படி, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும். அடுத்த ஆண்டு 2024 – செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறோம்.

தேர்தலை நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும் என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

  • அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு நிரந்தரமானது அல்ல
  • 370 ஆவது சட்டப்பிரிவை நீக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு
  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு தற்காலிகமானது
  • ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும்.
  • ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும்
  • இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது
  • இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு
  • ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது
  • 370வது சட்டப்பிரிவை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
  • அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு நிரந்தரமானது அல்ல.
  • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு போர் சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடு

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளை வெளியிட்டான்ர்.

பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 2019 ஆகஸ்ட் 5ல் நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம். ஒன்றுபட்ட இந்தியாவை கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டின் சான்று. நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும் தீர்ப்பு திகழ்கிறது. வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சிக்கு சாட்சியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 370 ஆவது சட்ட பிரிவால் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்திற்கு பயன்களை கொண்டு சேர்க்க உறுதி கொண்டுள்ளோம்.

மத்திய அமைச்சர் அமித்ஷா

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். பிரதமர் மோடி பிரிவு 370 ஐ ரத்து செய்து ஒரு தொலைநோக்கு முடிவை எடுத்தார். அதன் பின்னர் ஜம்மு காஷ்மீரில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பியுள்ளது. 370 பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஏழை, எளியவர்களின் உரிமை மீட்கப்பட்டது. சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளில் உள்ள செழிப்பு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளிலும் வசிப்பவர்களின் வருமானத்தை உயர்த்தியுள்ளது. பிரிவு 370 ஐ ரத்து செய்யும் முடிவு முற்றிலும் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது.

பாஜக., தேசிய தலைவர் நட்டா

சட்டப் பிரிவு 370 தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாஜக., வரவேற்கிறது. ஜம்மு- காஷ்மீரை நாட்டின் முக்கிய சித்தாந்தத்தில் சேர்க்கும் வரலாற்றுப் பணியை பாஜக., செய்துள்ளது. இதற்காக பிரதமருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா

தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. அதேநேரத்தில் மனம் தளரவில்லை. பாஜக.,வுக்கு இந்த நிலையை எட்ட பல ஆண்டுகள் ஆனது. நாங்களும் நீண்ட நாட்கள் போராட தயாராக இருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe