நாடாளுமன்ற தாக்குதல் 22வது நினைவு தினம்; அத்துமீறி நுழைந்த இருவர் புகைப் பொருள் வீசியதால் கைது!

Published:

attack on parliament day - 2026
#image_title

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவர், பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து எம்.பி.,க்கள் இருக்கையின் மேல் ஏறி ஓடி, கையில் இருந்த வண்ணப் புகை வெடிபொருளை வெடிக்கச் செய்தனர். அவர்கள் இருவரும் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கோஷமெழுப்பிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியில் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று (டிச.13) மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து எம்.பி.,க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்து அத்துமீறிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கையில் வண்ண புகை வெடிபொருள்கள் வைத்திருந்தனர். அதனை பற்றவைத்து புகை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து எம்பி.,க்களே, அந்த இருவரையும் மேலும் ஓட விடாமல் தடுத்து பிடித்தனர். காவலர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரையும் வெளியே அழைத்து வந்தபோது இந்த இருவருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் வெளியே ஆதரவாக குரல் எழுப்பிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் களேபரங்களால் நாடாளுமன்ற இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன. .

parliament 22nd day - 2026
#image_title

முன்னதாக நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களை இன்று நினைவு கூரும் விதமாக, அவர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ராணுவ அஞ்சலி செலுத்தப்பட்டது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பயங்கரவாதிகளின் ஆபத்தை எதிர்கொண்ட அவர்களின் துணிச்சலும் தியாகமும் நம் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் இந்த நாளில், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்துக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து வண்ண புகை எழச்செய்த ஒரு சம்பவம் இது என்று கூறப்படுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு டிச.13ல் பலத்த பாதுகாப்பையும் கடந்து, நாடாளுமன்றவளாகத்தில் 9 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தில்லி போலீசார் 14 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலின் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, மக்களவையின் பார்வையாளர் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்பி.,க்கள் அமர்ந்திருக்கும் அவைக்குள் குதித்து, எம்பி.,க்கள் அமரும் இருக்கைகளில் ஏறிக் குதித்து முன்னேறிச் சென்று, மறைத்து வைத்திருந்த வண்ணத்தை உமிழக் கூடிய கண்ணீர் புகை எரிபொருளை பற்ற வைத்து, அவைக் கட்டடத்தில் புகை மண்டலமாக்கினர். அப்போது அவர்கள் ‘சர்வாதிகாரம் ஒழிக’ என கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்பி.,க்கள் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

அதே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே பெண்கள் இருவர் கோஷம் எழுப்பியவாறு, அத்துமீறி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயற்சி செய்தார்கள். அவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த நீலம் (வயது 42), மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அன்மோல் ஷிண்டே (வயது 25) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இந்நிலையில் மக்களவைக்குள் புகைப் பொருளை வீசிய இருவரும், மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா என பெரிய வந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரிடமும் கர்நாடக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா வழங்கிய அனுமதி சீட்டு எப்படி வந்தது என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே பாதுகாப்பு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சி எம்பி.,க்கள் எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் எம்பி.,க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதுகுறித்து கூறுகையில், நாடாளுமன்ற தாக்குதல் நடந்த தினத்தில், நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் இது என்றார்.

சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள் கூறியபோது, இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு விதிமீறல் இது. மக்களவையில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது என்றார்.

காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டபோது, நாடாளுமன்ற தாக்குதல் நடந்த தினத்தில் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் இது என்று குறிப்பிட்டார். திரிணமுல் எம்.பி., சுதீப் பந்தோபாத்யாயா கூறிய போது, இது ஒரு மோசமான அனுபவம். அவர்கள் யாரைக் குறிவைத்து வந்தார்கள் என்ற தகவல் யாரிடமும் இல்லை. உடனடியாக அவையில் இருந்து வெளியேறி விட்டோம். ஆனால், இது பாதுகாப்பு விதிமீறல். புகை கக்கும் பொருளை எப்படி உள்ளே கொண்டு வந்தனர்.” என்று கேள்வி எழுப்பினார்.

சலசலப்பு சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் நாடாளுமன்ற மக்களவை கூடியது. அப்போது, காங்கிரஸ் எம்பி அதிர்ராஜன் சௌத்ரி, இந்த சம்பவத்தால் எம்.பிக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. பாதுகாப்பில் குளறுபடி உள்ளது. இது குறித்து விளக்க வேண்டும்” என்றார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

அதற்கு பதிலளித்த மக்களவை அவைத்தலைவர் ஓம்பிர்லா, பார்வையாளர் மாடத்திற்குள் இருந்து இருவர் நுழைந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது சாதாரண வண்ணப் புகைதான் எனத் தெரியவந்துள்ளது. எல்லோருடைய கருத்தையும் ஏற்று பரிசீலித்து இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்திற்காக சேவையாற்ற நாம் வந்திருக்கிறோம். எனவே நாடாளுமன்ற மக்களவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெறும். இருவரும் பிடிபட்டுள்ளனர், அவர்களிடமிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்” என்று கூறினார்.

குறிப்பாக, இந்த சம்பவத்துக்கு பிறகு, ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்பு ஓட்டைகளுடன் கூடியது என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துவதாக‘ எதிர்க் கட்சி எம்பிகள் வலியுறுத்திக் கூறியதால், இந்தச் சம்பவம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதைக் குறை கூறும் எதிர்ப்புக் குரலாகவே சமூக தளங்களில் அலசப்பட்டது.

Related articles

Recent articles

spot_img