பிரதமர் மோடியால் லட்சியத் தீவான லட்சத் தீவு! மலங்க விழிக்கும் மாலத்தீவு!

Published:

modi lakshadweep maldeives - 2026
#image_title

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் மாலத்தீவில் சர்ச்சை வெடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்றார். அங்கு ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். மேலும், லட்சத்தீவில் பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து பலரும் லட்சத்தீவை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட லட்சத்தீவு சிறந்த சுற்றுலாத் தலம் என்று கூறினர்.

தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் மோடி பகிர்ந்தார். லட்சத்தீவு என்பது அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயண பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டது, கடலுக்கு அடியில் நீந்தும் சாகசம் ஆகியவற்றின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதோடு இணைய தள தேடலில் லட்சத்தீவு கவனத்தை ஈர்த்தது. மாலத் தீவுக்கு போட்டியாக லட்சத் தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து மாலத்தீவு அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியர்களை கேலி செய்தும், தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தனர். இதனால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும். மாறாக லட்சத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை கோமாளி, பொம்மை என்று மாலத்தீவு அமைச்சர் மரியம் விமர்சித்து இருந்தார். மேலும் 2 அமைச்சர்களும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தது.

இதை தொடர்ந்து பிரதமர் மோடியை இழிவாக விமர்சனம் செய்த மாலத்தீவு அமைச்சர்களான மால்ஷா ஷெரீப், மரியம் சியுனா, அப்துல்லா மசூம் மஜித் ஆகிய 3 பேரை மாலத்தீ அரசு இடைநீக்கம் செய்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியது. தில்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப்புக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மாலத்தீவு தூதர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இன்று காலை 9:35 மணிக்கு வரவழைக்கப்பட்டு 9:40 க்கு அமைச்சகத்தை விட்டு வெளியில் சென்றார். வெறும் 5 நிமிடம் கூட அவரிடம் பேசாமல் இந்தியா அவரை கடிந்துள்ளது.

லட்சத்தீவு கடற்கரையில் பிரதமர் மோடி இருந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பெருகும் ஆதரவு!

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து, பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் அக்ஷய் குமார், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், லட்சத்தீவின் அழகை முன்னிலைப்படுத்தி பதவிட்டுள்ளனர்.

மாலத்தீவு தலைவர்களின் கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ள அக்ஷய் குமார், “மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அவர்கள் இதைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நமது அண்டை நாடுகளுக்கு நல்லவர்கள்தான். ஆனால் இதுபோன்ற காரணமில்லாத வெறுப்பை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன், எப்போதும் அதைப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் கண்ணியம்தான் முதலில். இந்திய தீவுகளுக்கு சென்று நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்பது என்று முடிவு செய்வோம்” என்று கூறியுள்ளார்.

சல்மான் கான் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் பிரதமர் நரேந்திர மோடியை லட்சத்தீவின் அழகான, தூய்மையான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் சிறந்த அம்சம் என்னவென்றால், அது எங்கள் இந்தியாவில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள பதிவில், “லட்சத்தீவுகள் அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஏன் இந்திய தீவுகளுக்கு செல்லக்கூடாது?” என்று தெரிவித்து உள்ளார்.

ஜான் ஆபிரகாம், “அற்புதமான இந்திய விருந்தோம்பல், அதிதி தேவோ பவ என்ற எண்ணம் மற்றும் ஆராய்வதற்கான பரந்த கடல்வாழ் உயிரினங்கள். லட்சத்தீவு செல்ல வேண்டிய இடம்” என்று கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்து, “இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது அதிதி தேவோ பவ தத்துவத்துடன், நாம் ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது, பல நினைவுகளை உருவாக்க காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பலரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img