- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பதினேழாம் நாள்
ஐபிஎல் 2024 – 07.04.2024
இரண்டு ஆட்டங்கள்
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றாது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இடையே நடைபெற்றது.
மும்பை vs டெல்லி
மும்பை அணி (234/5, ரோஹித் ஷர்மா 49, இஷான் கிஷன் 42, ஹார்திக பாண்ட்யா 39, டிம் டேவிட் 45, ரொமாரியோ ஷெப்பேர்ட் 39, அக்சர் படேல் 2/35, நார்ட்ஜே 2/65) டெல்லி அணியை (205/8, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 71*, பிருத்வி ஷா 66, அபிஷேக் போரல் 41, ஜெரால்ட் கொயட்சி 4/34, பும்ரா 2/22) 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் நன்றாக ஆடினார்கள். ரோஹித் 27 பந்துகளில் 49 ரன் (6 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள்) அடித்தார். இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன் (4 ஃபோர், 2 சிக்சர்) அடித்தார். இன்று ஐ.பி.எல் 2024 இல் முதன் முறையாக ஆட வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 5 ரன் களில் அவுட்டானார். ஹார்திக் பாண்ட்யா (33 பந்துகளில் 39 ரன்), டிம் டேவிட் (21 பந்துகளில் 45 ரன்) இருவரும் மும்பை அணியின் ரன் ரேட் குறையா வண்ணம் பார்த்துக்கொண்டனர். இன்றைய ஹைலைட் மும்பை அணியின் ரொமாரியோ ஷெப்பேர்ட்-தான். கடைசி ஓவரில் 4 சிக்சர் மற்றும் 2 ஃபோர் அடித்து 202 என்று இருந்த மும்பை அணியின் ஸ்கோரை அவர் 234 ரன்னுக்கு உயர்த்தினார்.
235 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் முதல் நான்கு வீரர்கள் சிறப்பாக ஆடினர். டேவிட் வார்னர் (8 பந்துகளில் 10 ரன்) 3.4 ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பிருத்வி ஷா நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று அதிரடியாக ஆடினார். அவர் 40 பந்துகளில் 66 ரன் அடித்து 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து அபிஷேக் போரல் (31 பந்துகளில் 41 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்தில் ஆட்டமிழக்கமல் 71 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். ஆனால் பிற டெல்லி அணி வீரர்கள் நிலைத்து ஆடாததால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 205 ரன் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 34 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரில் லலித் யாதவ், குமார் குஷகர, ரிச்சர்ட்சன் ஆகியோர் கோயட்சி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். எனவே டெல்லி அணி 29 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மும்பை அணியின் ரொமாரியோ ஷெப்பேர்ட் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
லக்னோ vs குஜராத்
லக்னோ அணி (163/5, மார்கஸ் ஸ்டோயினிஸ் 58, கே.எல். ராகுல் 33, நிக்கோலஸ் பூரன் 32, ஆயுஷ் பதோனி 20, உமேஷ் யாதவ் 2/22, தர்ஷன் நல்கண்டே 2/21) குஜராத் அணியை (18.5 ஓவரில் 130, ராகுல் திவாத்தியா 30, சாய் சுதர்ஷன் 31, யஷ் தாகூர் 5/30, க்ருணால் பாண்ட்யா 3/110) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. இன்று இந்த அணியின் வீரர்கள் தடாலடி பேட்டிங் எதுவும் செய்யவில்லை. சீரான ரன்ரேட்டுடன் பேட்டிங் செய்தனர். ராகுல் (33 ரன்), ஸ்டோயினிஸ் (58 ரன்), நிக்கோலஸ் பூரன் (32 ரன்), பதோனி (20 ரன்) ஆகிய நால்வரும் சிறப்பாக விளையாடினர். டி காக் (6 ரன்), படிக்கல் (7 ரன்) இருவரும் இன்று சரியாக விளையாடவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுத்திருந்தது.
164 என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் கில் சுமாரான தொடக்கம் தந்தார்கள். அதன் பின்னர் டாகுதிவாத்தியா (30 ரன்) தவிர பிற குஜராத் அணி வீரர்கள் ஆட்டத்தை வெல்வதற்கான ந்ம்பிக்கையின்றி ஆடினர் இதனால் 18.5 ஓவரில் 130 ரன்னுக்கு அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது. லக்னோ அணியின் யஷ் தாகூர் 30 ரன் கொடுத்து 5 விக்கட் வீழ்த்தினார். க்ருணால் பாண்ட்யா 11 ரன் கொடுத்து 3 விக்கட் வீழ்த்தினார்.
லக்னோ அணியின் யஷ் தாகூர் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.