
பாரதத்தின் 77வது குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்த கையுடன், ஜன.27 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் பாரதத்துடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறது.
20 ஆண்டுகளாக இம்மாதிரி ஒரு ஒப்பந்தம் போட பாரதம் முயற்சித்து இந்த ஆண்டு தான் வெற்றி பெற்றிருப்பதாகவும், இந்த ஆண்டு இது நிறைவேற முக்கியக் காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் என்கிறார்கள் ஐரோப்பாவில். டிரம்ப்பு மேற்கொண்ட நெருக்குதல்களால், இங்கே ஓடி வந்து ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டிருக்கிறது. இவை, பாரதத்தை ஒரு காலத்தில் காலனி ஆக்கியவை என்பது குறிப்பிடத் தக்கது.
இரு சக்திவாய்ந்த தேசங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது வெறும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல; இரு தேச வளர்ச்சிக்கான ப்ளூபிரின்ட்; இருவருக்குமான உணர்வு உலக நன்மைக்கானது. 140 கோடி இந்தியர்களுக்கும், கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்களுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். ஜவுளி, நகைகள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் தொழில்சார்ந்த பொருட்களை, ஐரோப்பிய ஒன்றிய சந்தை எளிதில் அணுக இன்று வகை செய்யப்பட்டு உள்ளது. – என்று, ஐரோப்பிய யூனியனுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள தடையற்ற வணிக ஒப்பந்தமானது அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் தெரிவித்தார். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சாத்தியமாகியுள்ள இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய மைல்கல் என்றார் உா்சுலா. இதனால், ஆட்டோமொபைல், இயந்திர பாகங்கள், மருத்துப் பொருள்கள், ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐரோப்பிய யூனியனின் 96% ஏற்றுமதி பொருள்களுக்கு வரி குறைப்பு சாத்தியமாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய – பாரத வர்த்தக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது என்றால், ‘இது அநியாயம். எங்களை விட்டு இந்தியாவோடு ஒப்பந்தம் போடுவதா?’ என்று அமெரிக்கர்கள் கதறுவதிலிருந்தும், ‘ஒழிந்தது அமெரிக்கா’ என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து குரல்கள் எழுவதிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மகத்தான வர்த்தக ஒப்பந்திற்கு நன்றி சொல்ல வேண்டியது அமெரிக்க அதிபர் டிரம்புக்குதான் என பலரும் குறிப்பிடுகிறார்கள். காரணம், ஐரோப்பிய நாடுகளும் பாரதத்தை சிரித்த முகத்துடன் காலனி ஆதிக்க அதிகாரப் பார்வையில்தான் பார்த்தன. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் நரேந்திர மோடி எனும் தேசபக்தனின் உறுதியான தலைமையில், இந்தியாவின் அசுர வளர்ச்சி, பிற நாடுகளுடன் நட்பு, உலக அரசியலில் நிலையான உறுதியான முடிவுகள், ஸ்திரமான சிறப்பான ஆட்சி, சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா காலத்தில் பாரதம் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கி காப்பாற்றியது, ராணுவ வலிமை, தொழில்நுட்பத்தில் அதீத வளர்ச்சி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா இந்தியாவை சமமாக பாவிக்க வைத்த தன்மை, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத தன்மை, சீனா தானாகவே முன்வந்து இந்தியாவிடம் நட்பு பாராட்டுவது, இஸ்லாமிய நாடுகள் இந்தியாவைப் போற்றுவது… இவைகள்தான் இன்று ஐரோப்பிய யூனியன் இந்தியாவை நாடி வந்ததன் காரணங்கள் என்று சொல்லலாம்.
இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாராளுமன்றங்களில் ஒப்புதல் பெற இன்னும் 6 மாதங்களாகும் என்றாலும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பில்லை என்பதால், ஒப்புதல் நிச்சயம் என்று தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது எட்டாவது வர்த்தக ஒப்பந்தம் என்கிறார் பாரத அமைச்சர் பியூஷ் கோயல்.

இந்த ஒப்பந்தங்கள் வெறும் ‘வர்த்தகம்’ சம்பந்தப்பட்டதில்லை என்பதே இதில் இருக்கும் முக்கியமான விஷயம்!
இந்த வர்த்தகம் அத்தனையும் யூரோ – ரூபாய் கரன்ஸிகளைக் கொண்டே நடக்கப் போகின்றன. டாலரில் இல்லை. எனவே, இது அமெரிக்க டாலருக்கு மிகப் பெரிய பின்னடைவு என்கிறார்கள். இதுகுறித்து, அமெரிக்காவில் ஏற்கெனவே புலம்பல் ஆரம்பித்து விட்டது.
ஐரோப்பிய ஒன்றியமும் பாரதத்தின் யுபிஐ-யும் இணைந்து செயலாற்றும் என்றும் தெரிகிறது. ரூபாய் உபயோகத்தால் ரூபாயின் மதிப்பு உயர்வதுடன், ஒப்பந்தம் செய்திருக்கும் நாடுகளில் இனி இந்தியா விரோத பயங்கரவாதிகள் (உதாரணத்துக்கு காலிஸ்தானிகள்) பாரத விரோத செயல்களில் ஈடுபட முடியாது. ஒப்பந்தம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா போன்றவற்றில் ஏற்கனவே காலிஸ்தானிகள் முன்பு போல பாரத விரோத வேலைகளில் ஈடுபட முடியவில்லை என்பதை கவனிக்கலாம். மேலும் இனி பாரதத்திலிருந்து குற்றவாளிகள் எவரும் இந்த நாடுகளில் சென்று ஒளிந்து கொள்ள முடியாது.
கனடாவும் ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அஜித் டோவல் அடுத்த மாதம் கனடா செல்லவுள்ளார். வெவ்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, பிரான்ஸின் ஜனாதிபதி மேக்ரோன், பிரேசில் லூலா, கனடாவின் கார்னி, இத்தாலி பிரதமர் மெலோனி, நெதர்லாந்து பிரதமர் என பலரும் அடுத்த சில நாட்களில் பாரதம் வருகிறார்கள்.
பாரதத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறார் பிரதமர் மோதி. அவருக்கும், அவரது அணியின் ஜெய்ஷங்கர், பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், அஜித் டோவல் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் செயல்பாடுகளில் பெரும் பங்கு உள்ளது.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் கிடைக்கும் பலன்கள் :
இந்தியாவுக்கும், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதை, மகத்தான ஓர் ஒப்பந்தம் என்று குறிப்பிடும் வகையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. அப்படியெனில், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமா என்ற எண்ணம் எழுவது இயல்புதான். ! மேலும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பல்வேறு நலன்களை அளிக்கும் என்று கூறப்பட்டது.
முதலில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்ப்போம்!
- ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் சாதனங்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது
- ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது
- அடுத்த 7 ஆண்டுகளில், 93% பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும்
- இரு தரப்புக்கும் இடையிலான 99.5% வர்த்தகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைக்கும்
- இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் மற்றும் வேளாண் பொருட்கள் மீதான வரி விதிப்பு முற்றிலுமாக நீக்கப்படவில்லை
- இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரி விதிப்பு பூஜ்ஜியம் ஆக்கப்பட்ட துறைகள்:
கடல் சார் பொருட்கள் ( தற்போதைய வரி 26% ),
ரசாயனங்கள் ( தற்போதைய வரி 12.8% ),
பிளாஸ்டிக்ஸ், ரப்பர் ( தற்போதைய வரி 6.5% ),
தோல், காலணிகள் ( தற்போதைய வரி 17% ),
ஜவுளி ( தற்போதைய வரி 12% ),
ஆயத்த ஆடை ( தற்போதைய வரி 4% ),
பேஸ் மெட்டல் ( தற்போதைய வரி 10% ),
ஆபரணங்கள் ( தற்போதைய வரி 4% )
- இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு வகிதம், 3.8 %த்தில் இருந்து 0.1 %மாகக் குறைந்துள்ளது
- ஐரோப்பிய ஒயின், பீர், ஆலிவ் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவு, சில பழங்கள் மீதான வரி, இந்தியாவில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது
- பிரீமியம் ஒயின் மீதான இந்திய வரி விதிப்பு, 150 %த்தில் இருந்து 20%மாக படிப்படியாகக் குறைக்கப்படும்.
- ஐரோப்பிய தயாரிப்பு கார்கள் விலை 17,800 டாலர்களுக்கு குறைவு என்றால், இந்த ஒப்பந்த விதிமுறைகள் பொருந்தாது. அதற்கு மேல் விலை கொண்ட கார்கள் என்றால், 3 பிரிவாக ஆக்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் கோட்டா மற்றும் தனித்தனி வரி விதிப்பு இருக்கும் . பெரும்பாலான கார்களுக்கு 30 முதல் 35% வரி விதிப்பு இருக்கும் . (பிஎம்டபிள்யூ., வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ், ரெனால்ட் போன்ற ஐரோப்பிய இறக்குமதி கார்களின் மீதான வரி கணிசமாக குறையும்.)




