
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேசியப் பாடலும் தேசிய கீதமும் இணைந்து இசைக்கப்படும் போதெல்லாம், தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவத்தில் உள்ள அனைத்து ஆறு சரணங்களும் முதலில் இசைக்கப்பட வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றம், ஆளுநர்களின் உரை மற்றும் பிற அதிகாரபூர்வ நிகழ்வுகள் போன்ற முக்கிய அரசு விழாக்களில் இந்த முழுமையான ஆறு சரணங்கள் கொண்ட வடிவம் பாடப்படவோ அல்லது இசைக்கப்படவோ வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களின் கீழ், குடிமை விருது வழங்கும் விழாக்கள், அதிகாரப்பூர்வ அரசு விழாக்கள் மற்றும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் பிற நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் வருகை தரும்போதும் அங்கிருந்து புறப்படும்போதும் தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் இசைக்கப்பட வேண்டும். மேலும், அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவதற்கு முன்னரும் பின்னரும், அணிவகுப்பின்போது தேசியக் கொடி கொண்டு வரப்படும்போதும் இது இசைக்கப்பட வேண்டும். தேசியப் பாடல் இசைக்கப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் ‘கவன நிலை’யில் (attention posture) நேராக நிற்க வேண்டும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கடந்த 9ம் தேதியிட்ட அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிகாரபூர்வ அரசின் முக்கிய விழாக்களில், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தேசியப் பாடலான வந்தேமாதரம் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலப் பாடல் இவற்றுடன் பாட நேர்ந்தாலும், தேசியப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என்பதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதனுடன், தேசியப் பாடலையும் மாநிலப் பாடலையும் எப்படி உச்சரிக்க வேண்டும், எத்தனை கால அவகாசத்துக்குள் பாடப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான அறிக்கையையும் அளித்துள்ளது.




