புது தில்லி பொய்யாக பாலியல் பலாத்காரப் புகார் கொடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது…. பொய்ப் புகார் காரணமாக குற்றச் செயல் புள்ளி விவரங்கள் அதிகமாகின்றன. பொய்ப் புகாருக்கு ஆளான நபர், சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கும், தொல்லைக்கும் ஆளாகிறார். அந்த நபரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். நிரபராதியான அந்த நபர், பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும், அவரது நேர்மை சந்தேகத்திற்கு உள்ளாகிறது. அந்த நபர் வாழ்நாள் முழுவதும் பலாத்காரக் குற்றவாளியாகவே கருதப்படுகிறார் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மீது பெண் கொடுத்த பொய் பலாத்கார புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்தது. இவ்வாறு பொய்ப் புகார் கொடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் தனது கடமையைச் செய்யத் தவறியதாகக் கருதப்படும் எனவும் அது கூறியுள்ளது.

