திருமலை திருப்பதி காத்திருப்பு அறைகளில் இனி பொங்கல், உப்புமா, சட்னியுடன் சிற்றுண்டி!

Published:

annaprasadam ttd - 2026

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காத்திருப்பு அறைகளில் வெகு நேரம் கழிப்பவர்களுக்கு, இனி பொங்கல், உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகளுடன் சட்னியும் வழங்கப்படும். இந்த சேவையை தமிழ் வருடப் பிறப்பான விளம்பி ஆண்டு தொடங்கிய நாளில் தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

பொதுவாகவே திருப்பதியில் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். தற்போது தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழுமலையானை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தேவஸ்தானம் விரைவில் நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் 24 மணி நேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால், மோர் என பலவற்றையும் வழங்கி வருகிறது. பெருமாளை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்களுக்கு, காத்திருப்பு அறைகளிலும், பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும் அன்னதானம், சிற்றுண்டி ஆகியவை வழங்கப் படுகின்றன.

இதனிடையே பக்தர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும் போது, தங்களுக்கு வெறும் பொங்கல், ரவை, சேமியா உப்புமா ஆகியவற்றை வழங்கும்போது அதனுடன் சேர்த்து சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தேவஸ்தான நிர்வாகம், தமிழ் வருடப் பிறப்பான சனிக்கிழமை இரவு முதல் பொங்கல் மற்றும் உப்புமாவுடன் வேர்க்கடலை சட்னி வழங்கத் தொடங்கியுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கையை பக்தர்கள் வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img