புது தில்லி: இரட்டை இலைச் சின்னம், அதிமுக., கட்சி இரண்டையும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் டிடிவி தினகரன். இந்த வழக்கை தில்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்க்கின் விசாரணை இன்று தொடங்கியது. இதில் கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக., பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், பொதுச் செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் வாதாடினார்.
இவ்வாறு இன்றைய வாதம் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.