சென்னை:
மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டில் நடைபெற்றுள்ள மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, இந்த முறை தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
செப்.20 இன்று அவர் நாட்டு மக்களுக்கு வானொலியில் ஆற்றிய உரை:
எனதருமை நாட்டு மக்களே…
உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், இது மனதின் குரலின் 12வது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கி ஓராண்டுக்காலம் நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதியன்று முதல் மனதின் குரலை வெளிப்படுத்தக் கூடிய பேறு எனக்குக் கிட்டியது. மனதின் குரலின் ஓராண்டுக் காலத்தில் பல விஷயங்கள், இதிலிருந்து உங்களுக்கு என்ன கிடைத்தது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது எனக்கு பல்வேறு விஷயங்களை அளித்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். மக்களாட்சியில் மக்கள் சக்திக்கு என பெரிய மகத்துவம் இருக்கிறது. என் வாழ்கையில் அடிப்படையாக இருக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது, இதன் காரணமாக இந்த மக்கள் சக்தி மீது எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மனதின் குரல் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது, அவை அனுபவங்களாகப் பரிமளித்திருக்கின்றன, இவையெல்லாம் மக்கள் சக்தி எத்தனை மகத்தானது என்பதை நம் எல்லாருக்கும் விளங்க வைத்திருக்கிறது. நம் முன்னோர்கள், மக்கள் சக்தி மகேசன் சக்தி என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். மனதின் குரலில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து, நமது முன்னோர்களின் எண்ணத்தில், கருத்தில் பெரும் சக்தி இருக்கிறது, பெரும் உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூற முடியும். ஏனென்றால் இதை நானே உணர்ந்திருக்கிறேன்.
மனதின் குரலுக்காக நான் மக்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வந்தேன். ஒவ்வொரு முறையும் அவற்றிலிருந்து 4 அல்லது 5 ஆலோசனைகளை மட்டுமே என்னால் வெளிப்படுத்த முடிந்தது. ஆனால், இலட்சக்கணக்கான விழிப்புணர்வு உடைய குடிமக்கள் எனக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள். இதுவே கூட ஒரு மிகப் பெரிய சக்தி. பிரதமருக்கு ஆலோசனைகளை அளித்தோம், mygov.in இணைய தளத்தில் பதிவு செய்தோம், கடிதங்களை அனுப்பினோம், ஆனால் ஒரு முறை கூட நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் அவர்களில் சிலருக்கு ஏற்பட்டிருக்க கூடும், ஆனால் நான் அப்படி கருதவில்லை. இந்த இலட்சக்கணக்கான கடிதங்கள் எனக்கு மிகப் பெரிய கல்வியை அளித்திருக்கின்றன. அரசின் பல நுணுக்கமான இடர்ப்பாடுகள் குறித்து எனக்குத் தகவல் கிடைத்தது. இந்த விஷயத்தில் நான் ஆல் இண்டியா ரேடியோவுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் இந்த ஆலோசனைகளை வெறும் காகிதமாகப் பார்க்கவில்லை, இவற்றை வெகுஜனங்களின் எதிர்பார்ப்புக்களாகப் பார்த்தார்கள். இதன் பிறகு, அவர்கள் நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை வானொலிக்கு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க அழைத்தார்கள். வெகுஜனங்களின் கருத்துக்களை துறைப் பிரதிநிதிகள் முன்பாக வைத்தார்கள். சில விஷயங்களுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டார்கள். அரசின் பல்வேறு துறைகளுமே கூட இந்தக் கடிதங்களை ஆய்வு செய்தார்கள். அவற்றின் எவை கொள்கை ரீதியானவை, எவை தனி நபர் காரணமாக பிரச்சனையாக்கப்பட்டிருக்கின்றன, எவை அரசின் கவனத்திலேயே இல்லை என அடிமட்டத்திலிருந்து தொடங்கி பல விஷயங்கள் அரசின் முன்பாக வரத் தொடங்கின. நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் தகவல் என்பது அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும், வழிகாட்டுதல் என்பது மேலிருந்து கீழ் நோக்கியதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு. தகவல்களின் ஊற்றுக்கண்ணாக மனதின் குரல் ஆகி விடும் என்று யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள்? ஆனால் இது அப்படித் தான் ஆகி விட்டது.
இதே போன்று மனதின் குரல் மக்கள் குரலின் வெளிப்பாடாக அமைந்தது. ஒரு முறை நான் யதார்த்தமாக selfie with daughter என்று கூறியிருந்தேன். உலகின் மூலை முடுக்கெங்கும் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல இலட்சம் பேர்கள் தங்கள் மகள்களோடு புகைப்படங்கள் எடுத்து அனுப்பினார்கள்; பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்தது. அவர்கள் selfie with daughter, மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது, அவர்களின் மகள்களின் தன்னம்பிக்கை அதிகரித்த அதே வேளையில், அவர்களுக்குள்ளே கூட ஒரு தன்முனைப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்தவர்களின் மனங்களில் கூட, இனி மகள்களை உதாசீனம் செய்யக் கூடாது என்ற எண்ணம் உதித்தது. ஒரு அமைதிப் புரட்சி உருவானது.


