
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்ப்பு விடுத்தார். மேலும், பதவியேற்ற 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவு காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்று மிகவும் அரிதாக இந்த வழக்கை நள்ளிரவே விசாரணை எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், விடிய விடிய விசாரணை நடத்தியது. பின்னர், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தது. மேலும், எடியூரப்பா ஆளுநருக்கு அளித்த கடித நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பதவியேற்பதற்கு எந்த தடையும் இல்லாததையடுத்து, இன்று காலை 9 மணியளவில் கர்நாட முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். கர்நாடகத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் எடியூரப்பா பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். எடியூரப்பாவுடன் 5 அமைச்சர்கள் பதவியேற்க கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

