பெங்களூர்: இன்று மாலை 4 மணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதிர்ச்சிகரமான திருப்பங்களை கர்நாடகம் கண்டு வருகிறது.
இன்று முற்பகல் 11 மணிக்கு கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் இன்று மாலை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடியூரப்பா கொண்டு வந்து உரையாற்ற உள்ளார். அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்து எதிர்தரப்பிலும் உரையாற்ற உள்ளார்கள்.
இந்த நேரத்தில், சட்டமன்றத்தில் அமளி துமளி ஏற்படுத்தி, கூச்சலும் குழப்பமும் நிலவும் சூழலைப் பயன்படுத்தி, எடியூரப்பாவுக்கு ஆதரவாக அவர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த லிங்காயத் உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செல்ல திட்டமிட்டுள்ளனராம்.
அதற்குக் காரணம், காங்கிரஸின் லிங்காயத் தனி மத அங்கீகார விவகாரம், அதனால் காங்கிரஸை மத நம்பிக்கையுள்ள லிங்காயத் சமூகம் புறக்கணித்தது, லிங்காயத் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் காங்கிரஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தது என பல காரணங்கள் அலசப்பட்டாலும், பாஜக.,வைச் சேர்ந்தவராக இருந்தாலும், எடியூரப்பா லிங்காயத் பிரிவின் தலைவராகவே இப்போதும் பார்க்கப்படுவதுதான்!
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘மக்கள் தீர்ப்பின்படியும், மனசாட்சியின்படியும், எனக்கு ஆதரவாக ஓட்டெடுப்பின் போது காங்கிரஸ் மற்றும் மஜத., எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவர் பொத்தாம் பொதுவாக சொன்னாரோ இல்லையோ, தன் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு விடுத்த ஒரு வேண்டுகோளாகவே பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் 78 உறுப்பினர்களைக் கொண்டிருந்தும், தாங்கள் ஆட்சி அமைத்து, மஜத.,வின் ஆதரவைக் கோராமல், தானாகவே முன்வந்து குமாரசாமியை முதல்வர் ஆக்கி, தாங்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக திட்டமிட்ட செயல்பாட்டால், சித்தராமையா மீது அதிருப்தியில் உள்ளனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர். அவர்கள் இதனால் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் மற்றும் மஜத., கட்சியின் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் சிலர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள், அல்லது, குழப்பத்தைப் பயன்படுத்தி வெளியேறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸில் 18 பேரும், மஜத.,வில் 2 பேரும் என மொத்தம் 20 லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் உள்ளனர்.


