ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கி கணக்கை அம்மாதம் முடியும் வரை முடக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் மானியங்கள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்கில் சில மாற்றங்களை கொண்டுவர ஆர்.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இந்த கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு அம்மாதம் முடிவு வரை முடக்கப்படும் என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. இதனால் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட தனியார் வங்கிகள், அடிப்படை கணக்குகளை சாதாரண கணக்குகளாக மாற்றி வருகிறது.
ஆனால் இவ்வாறு வங்கிக் கணக்கு மாற்றப்பட்டால் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும். தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்தவும் நேரிடும். மத்தி அரசு இணைய பரிவர்த்தனையை முன்னிறுத்திய நிலையில் ஆர்.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான வங்கி கணக்கு பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக புகாரும் எழுந்துள்ளது



