புது தில்லி: மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கும் முறையில் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘அடல் பென்ஷன் யோஜனா’ ஓய்வூதியத் திட்டத்தில் சந்தாதாராக இணையும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு 60 வயதுக்கு பின்பு 5 அடுக்குகளில் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் 2015ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது 1.02 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய திட்டமிட்ட தொகையான ரூ.5 ஆயிரம் என்பது போதுமானதாக இருக்காது என்பதால் இது குறித்து பரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.
இதை அடுத்து, இந்தக் கோரிக்கை குறித்து ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் ஹேமந்த் ஜி.கான்டிராக்டர் கூறுகையில், ‘‘அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரையை நிதி அமைச்சசத்துக்கு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.
மேலும், ‘அடல் பென்ஷன் யோஜ்னா’ திட்டத்திற்கான வயது வரம்பை 18–ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை மத்திய நிதிச் சேவை துறையின் இணைச் செயலாளர் மாதேஷ் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளார்.




