புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் இனி மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும், புதிய விதிமுறைகளை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. பல மாநிலங்களில் அரசுக்கு சாதகமாக நடக்காத அல்லது நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதோடு சஸ்பெண்ட் அல்லது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. வட மாநிலங்களில் அசோக் கேம்கா, துர்கா சக்தி நெய்பால், குல்தீப் நாராயண் போன்ற மூத்த அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம், சஸ்பெண்ட் போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதை அடுத்து, இந்தப் பிரச்னையை மத்திய அரசுக்கு மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அரசியல் நோக்கத்துக்காக அகில இந்தியப் பணி அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தடுக்கும் விதமாக, ஒரு அதிகாரியை ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் செய்ய முடியாது; சஸ்பெண்ட் செய்த 48 மணி நேரத்துக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமானால், உரிய காரணம் அளிக்க வேண்டும்; மத்திய சிவில் சர்வீசஸ் வாரியம் அல்லது மத்திய ஆய்வுக் குழு இதை பரிசீலித்து அனுமதி தர வேண்டும். இல்லாவிடில் சஸ்பெண்ட் ரத்தாகிவிடும். ஓர் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவதை உறுதி செய்ய, 30 நாளுக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்து, அந்த விதிமுறைகள் அனைந்திந்திய சேவைகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) திருத்தச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அதிகாரியை மாநில அரசுகள் பழிவாங்குவதோ, அல்லது வீணான நடவடிக்கை எடுப்பதோ தடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

