இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் வென்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோய் 67 ரன் குவித்தார். இந்திய தரப்பில் பாண்ட்யா 38 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணியில் துவக்க வீரராகக் களம் இறங்கிய ஷிகர் தவன் ஏமாற்றமளித்தார். 3 பந்துகள் எதிர்கொண்டு 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கே.எல். ராகுல் 10 பந்துகள் எதிர்கொண்டு 19 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். முக்கிய கட்டத்தில் 2 விக்கெட்டுகள் சரிந்த போதும், துவக்க வீரராகக் களம் கண்ட ரோஹித் சர்மா அடித்து ஆடிவந்தார். அவருடன் கை கோத்த விராட் கோலியும் அதிரடி காட்ட ரன் வேகம் உயர்ந்தது.
விராட் கோலி 29 பந்துகளில் 43 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த பாண்ட்யா 14 பந்துகளில் 33 ரன் எடுத்து அதிரடி காட்டினார். மறு முனையில் ரோஹித் அசத்தலான சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதி செய்தார். அவர் 56 பந்துகளில் 100 ரன் எடுத்தார்.
இதை அடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.