இந்திய நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
கர்நாடகாவிலிருந்து செயல்படும் பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஆராய்ச்சி அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், மின்சாரம், சாலை, குடிநீர், வீடு போன்ற வசதிகள் மக்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2018 ஆம் ஆண்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு 2-வது இடம் பிடித்துள்ளது. பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து, பொது விவகாரங்களுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தெலங்கானா 3-வது இடமும், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
சமூக பொருளாதாரத்தில் அதிக ஏற்றத்தாழ்வுகள் உள்ள மாநிலங்களாக மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் 5 இடங்களில் தென்னிந்தியாவின் 4 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



