அந்த 700 கோடி மேட்டர்…! ‘கேடி’த் தனம் செய்வது யார்..?

Published:

kerala people mind 1 - 2026

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு நிவாரண உதவியாக ரூ.700 கோடி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்ததாகவும், அதற்கு கேரள முதல்வர் பிணரயி விஜயன் நன்றி கூறியதாகவும் ஆனால் அந்த உதவியை மத்திய அரசு ஏற்காது என்றும் தகவல் வெளியானது. இதை அடுத்து நிர்வாகச் சீர்கேட்டால் நிகழ்ந்த வெள்ளத்தால் மக்கள் படும் சிரமங்களை மறக்கடிக்கவும், மாநில அரசு மீது எழுந்த எதிர்ப்பலையை அரசியல் செய்து மடை மாற்றி மோடி மீது திசை திருப்பவும் வழக்கமான அரசியல் பித்தலாட்டங்களை மாநில கம்யூனிச அரசு மேற்கொன்டது.

இதை அடுத்து, யுஏஇ உதவிக்கு பிரதமர் மோடியே நன்றி தெரிவித்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த 700 கோடி ரூவாய் உதவியை ஏன் ஏற்க மறுக்கிறார் என்றெல்லாம் அரசியல் செய்யப்பட்டது.

ஆனால், மோடியின் நன்றி அறிவிப்பு டிவிட்டர் ஆகஸ்ட் 18ஆம் தேதி செய்யப்பட்டது என்றும், ரூ.700 கோடி யுஏஇ தருவதாகச் சொன்ன பிணரயி விஜயன் வெளியிட்ட நன்றி அறிவிப்பு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியானதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் மோடி ஆதரவாளர்கள்.

மோடியின் நன்றி அறிவிப்பானது உடனடியாக இந்தத் துயரத்தில் பங்குகொள்வதாக வெளிப்படுத்திய ஐக்கிய அமீரகத்தின் நல்லெண்ணத்திற்குதானே தவிர, நூறு கோடி டாலர் தருவதாகச் சொல்லப்படுவதற்கானது அல்ல என்று தெளிவாக்குகிறார்கள். காரணம், மோடி எந்த இடத்திலும் ரூ.700 கோடி என்றோ, 100 கோடி டாலர் என்றோ குறிப்பிடவில்லை என்பதும், உதவ முன்வருவதாகச் சொன்ன நல்ல எண்ணத்துக்கு நன்றி என்றும்தான் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறி வருகிறார்கள்.

ஆனால், கேரள வெள்ள பாதிப்புக்கு ஐக்கியஅரபு அமீரகம் 700 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாக நான் கூறியதில் எந்தக் குழப்பமும் இல்லை என்று பாஜக.,வினருக்கு பதில் சொல்லி வருகிறார் மாநில முதல்வர் பிணரயி விஜயன். இந்த உதவிக்காக, பிரதமர் நரேந்திர மோடியே, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் என்றுதான் இன்றும் பிணரயி விஜயன் தகவல்களைக் கூறி வருகிறார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

modi tweet uae - 2026

கேரள முதல்வர் பிணரயி விஜயன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஐக்கிய அமீரக அரசு, கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது; அமீரகத்துடன் கேரளா சிறப்பான உறவுமுறையைக் கொண்டுள்ளது; மலையாளிகளின் மற்றொரு வீடாக அமீரகம் உள்ளது; அவர்களின் உதவிக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.

“அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் ஷயத் அல் நயான், பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டு- தாங்கள் உதவி செய்யும் தகவலைத் தெரிவித்திருக்கிறார்” என்றும் பிணரயி விஜயன் குறிப்பிட்டிருந்தார். இது கேரள முஸ்லிம்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றியை தெரித்து பேனர்களைக் கட்டினர்.

தொடர்ந்து, வெளிநாடு ஒன்றே இவ்வாறு 700 கோடியை அள்ளித் தரும் போது, மத்திய அரசு தனது நாட்டிலுள்ள மாநில மக்களை கைவிடக் கூடாது அரசியல் செய்தனர்.
இந்நிலையில்தான் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் எந்தவொரு வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து இந்தியா நிதியுதவியைப் பெறுவதில்லை என்பதால், கேரள பேரிடருக்கும் வெளிநாட்டு நிதிஉதவியை இந்தியா பெறாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது!

ஏற்கெனவே கத்தார், தாய்லாந்து, ரஷ்யா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் உதவியை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கேரளத்துக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை மத்தியஅரசு ஏன் தடுக்கிறது? என்று கம்யூனிஸ்ட்கள் செய்திகளைப் பரப்பினர். இதன் மூலம் மத்திய அரசு கேரள மக்களுக்கு எதிராக இருப்பது போன்ற எண்ணத்தை விதைக்க முற்பட்டனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகமோ தாங்கள் அதிகாரபூர்வமாக அப்படி எதுவும் உதவுவதாக அறிவிக்கவில்லை என்று தெளிவாகக் கூறியது. தொடர்ந்து பிணரயி விஜயன் குறிப்பிட்ட லூலூ நிறுவன தொழிலதிபர், தன் பெயரை தேவையின்றி இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டாம், தான் அவ்வாறு கூறவில்லை என்று ஒதுங்கினார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

இதை அடுத்து, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகார பூர்வமாக எங்குமே அறிவிக்கவில்லை; அப்படியிருக்க, அதைத் தடுப்பதற்கான தேவை எங்கிருந்து வந்தது?” என்று மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக்கினார்.

இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அகமது அல்பன்னா என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், “கேரளாவிற்கு உதவுவதற்காக தேசிய குழு ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம்; இந்தக் குழுவானது இந்திய வெளியுறவு அமைச்சகத்துடனும் தூதரகத்துடனும் இணைந்து பணியாற்றி தேவையானவர்களுக்கு நிதி சென்று சேர்வதை உறுதி செய்யும்; ஆனால் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் அமீரகம் வெளியிடவில்லை” என்று தெரிவித்தார்.

இதை அடுத்து, பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “அமீரகத்தின் தூதரே இவ்வாறுகூறிவிட்ட நிலையில், அந்நாடு நிதியுதவி அளிக்க முன்வந்தது என்று கூறியதற்கு முதல்வர் பினராயி விஜயன் ஆதாரம் தர வேண்டும்” என்று கோரினார்.

இந்நிலையில் வெள்ளியன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், “ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவி குறித்து எந்தக் குழப்பமும் இல்லை; முன்பு நான் குறிப்பிட்டபடி, நிதியுதவி அளிப்பது குறித்து அமீரகத்து இளவரசர், பிரதமர் மோடி இடையே ஆலோசனை நடந்துள்ளது” என்று மீண்டும் தன் பேச்சை நியாயப் படுத்தும் விதத்தில் அதே பொய்யைக் கூறினார்.

மேலும், “அந்த ஆலோசனையின்போது, அமீரக இளவரசர் 100 மில்லியன் டாலர் வரை (தோராயமாக 700 கோடி) கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கிறோம் என்று பிரதமர் மோடியிடம் கூறியதாக தொழிலதிபர் யூசுப் அலி என்னிடம் கூறினார்; நான் அவரிடம் இதனை வெளியில் சொல்லலாமா என்று கேட்டேன்; அதற்கு அவர் சொல்லலாம் பிரச்னை இல்லை என குறிப்பிட்டார்” என்று கூறினார் பிணரயி விஜயன்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

மேலும், “ஐக்கிய அரபு அமீரகம் கேரளத்திற்கு உதவி செய்ய முன்வந்ததாக குறிப்பிட்டு, அதற்காக பிரதமர் மோடியே தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்; சந்தேகம் இருப்பவர்கள், பிரதமர் மோடியின் டுவீட்டையும் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்” என்றும் கூறினார்.

ஆனால், பினராயி விஜயன் குறிப்பிட்ட- அந்த டுவிட்டர் பதிவில், “இந்தக் கடினமான நேரத்திலும் கேரள மக்களுக்காக ஆதரவளிக்க முன்வந்துள்ள ஷேக் முகமது பின் சயீத் பின் சுல்தானுக்கு மிக்க நன்றி. கேரளா குறித்து உங்களுடைய கவலை, இந்தியா மற்றும் யு.ஏ.இ அரசாங்கம் மற்றும் இரு நாட்டு மக்களிடையில் சிறப் பான ஒரு உறவைப் பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளது ஆகஸ்ட் 18-ஆம் தேதி! அந்த டிவிட்டர் பதிவில், யுஏஇ.,யின் நல்லெண்ணத்துக்கான நன்றி அறிவிப்பு மட்டுமே இருந்தது, ரூ.700 கோடி மேட்டர் எதுவும் இல்லை!

இந்த விவகாரங்களை அலசும் கேரள மக்கள் இப்போது, கேடித்தனம் செய்வது யார் என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img