புது தில்லி: ஆர்எஸ்எஸ்., கொள்கையை யாரும் எங்கும் திணிப்பது இல்லை என்று பேசினார் ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பாகவத்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில், எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் தில்லியில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், இன்று வரை ஆர்எஸ்எஸ் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும், மக்கள் புரிதலுக்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகவும் கூறினார். நாட்டின் கட்டமைப்பு, வளர்ச்சிக்காக ஆர்எஸ்எஸ் பாடுபடுகிறது, மக்களை இணைத்துச் செல்லவே விரும்புகிறது என்றார்.
ஆர்.எஸ்.எஸ்., தனித்துவம் கொண்டது. இந்த இயக்கத்தின் தரத்திற்கு இணையாக வேறு இயக்கம் இருக்க முடியாது. எங்கள் கொள்கையை யாருக்கும் திணிக்கவில்லை. பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். சமூகத்திற்காக நாங்கள் உழைக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பலத்தை நிரூபிக்கிறது.
சிறை செல்வது தேசபக்தி அல்ல என்று ஹெட்கேவர் கூறுவார். மற்ற மக்களுடன் இணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பார். இதனையே நாம் பின்பற்றுகிறோம். ஆர்.எஸ்.எஸ்.,க்கு விளம்பரம் தேவையில்லை.
விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும். இவை ஆக்கபூர்வமானதாக அமையும். நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே நமது பலம் என்றார் மோகன் பாகவத்.
இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர், பாலிவுட் பிரபலங்களான நவாசுதின் சித்திக், மனீஷா கொய்ராலா, அனு மாலிக், அன்னு கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




