இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர் பிரித்து சென்று வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்து இருப்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அடுத்து அருணாவை காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழவே தாம் விரும்புவதாக அருணா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


