சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள ஐஜி ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகச் செய்தியாளர் கவிதா உட்பட இளம்பெண்கள் இருவர் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் ஏராளமான பக்தர்கள் சூழ்ந்துகொண்டுள்ளனர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், ஐயப்ப பக்தர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் கவிதா சக்கல், சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா ஆகிய இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.
காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர்கள் கோவிலின் அருகே நடைப்பந்தல் என்னுமிடத்தைச் சென்றடைந்தனர். இந்நிலையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஐயப்ப பக்தர்களும் கோவிலைச் சூழ்ந்துகொண்டு இளம்பெண்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஐயப்பன் கோவிலுக்கு உரிமையுள்ள பந்தளம் அரச குடும்பத்தினர், பெண்களை உள்ளே நுழைய முயன்றால் கோவிலைப் பூட்டும்படி பூசாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வழிபாடு நடத்த வந்துள்ள பெண்களைப் பக்தர்கள் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக ஐஜி சிறீஜித் தலைமையில் காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் முற்றுகையையும் தாண்டி காவல்துறையினர் பாதுகாப்புடன் பெண்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகப் பக்தர்களும் பூசாரிகளும் பதினெட்டுப் படிகளின் கீழ்ப் பகுதியில் அமர்ந்து ஐயப்பன் பாடல்களைப் பாடிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





