மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டுள்ளதால், மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப் படுகிறது.
மத்திய ரிசர்வ் வங்கி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. அதற்கு, நாட்டின் பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு சுயமாகவே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது. இந்நிலையில் அண்மைக் காலமாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் அரசுகள் தலையிடுவது பேரழிவை ஏற்படுத்தும் என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, ரிசர்வ் வங்கியின் தாராள கடன் கொள்கைகளால்தான் 2008 முதல் 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாராக்கடன் பல லட்சம் கோடியாக அதிகரித்தது என்றார்.
ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 7ன் படி, மத்திய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சில வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கிக்கு வழங்கலாம். ஆனால், இந்த சட்டப்பிரிவு இதுவரை பயன்படுத்தப் பட்டதேயில்லை என்கிறார்கள். ஆனால், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி, தற்போதைய மத்திய அரசு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு சில கடிதங்களை அனுப்பியதாம்! பண்டிகைக் காலம் மற்றும் தேர்தல்கள் நெருங்குவதால் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது மத்திய அரசு. அந்த நோக்கில், நலிவடைந்த வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கவும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எளிதில் கடன் பெறவும் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சில அறிவுறுத்தல்களைக் கொடுத்ததாம்!
ஆனால், ரிசர்வ் வங்கி தனது கொள்கைகளை தளர்த்த மறுத்து பிடிவாதம் செய்ததால் மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்யலாமா என்று யோசித்து வருகிறாராம்.
இந்நிலையில்தான், தன்னாட்சி அதிகாரம் என்பது ரிசர்வ் வங்கிக்கு அவசியமானது; அதனை மத்திய நிதி அமைச்சகம் மதிக்கிறது என்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறுகிறார்கள். நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது!
Related News Post: