பம்பா : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு பாஜக., கண்டனம் தெரிவித்துள்ளது.
சபரிமலை கோயிலைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் குழுவாகச் செல்வதற்கோ, கூட்டமாக நிற்பதற்கோ எவரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன், நாகர்கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்றார். நிலக்கல் பகுதியில் இன்று காலை அவரது கார், கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப் பட்டது.
தான் தடுக்கப் பட்டது ஏன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டபோது, அவரது காரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை வரை அனுமதிப்பதாகவும், அவருடன் வருபவர்களை அனுமதிக்க முடியாது என்றும் போலீசார் கூறினர்.
இதை அடுத்து, போலீசாருக்கும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஆதரவாளர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணனையும் கேரள அரசு பஸ்சில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்ல போலீஸார் அனுமதித்து அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக.,வின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.