பிணராயி விஜயனால் அமைதி இழந்த கேரளம்! அன்று தண்ணீர் வெள்ளத்தால் பேரழிவு, இன்று கண்ணீர் வெள்ளத்தால் சீரழிவு!

Published:

sabarimalai protest in kochi - 2026

திருவனந்தபுரம்: 2019ஆம் வருட முதல்நாளே கேரளத்துக்கு மிக மோசமான நாளாகவே துவங்கியிருக்கிறது. இந்து மத உணர்வுகளில் நம்பிக்கையற்ற, கிறிஸ்துவ இஸ்லாமிய பழக்கங்களில் அறிவுஜீவித்தனத்தை நம்புகின்ற கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் சபரிமலை விவகாரத்தில் நம்பிக்கைகளைப் புரிய வைத்திருக்கிறார்கள்!

பிரமசாரியாக ஐயப்பன் கோயில் கொண்டிருக்கிறார் என்று இந்துக்கள் நம்புகின்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அழைத்துச் சென்று, மத நம்பிக்கைகளை அழிக்கத் துடிக்கும் கம்யூனிஸ மாநில அரசுக்கு, மக்கள் வெள்ளத்தின் வடிவில் இப்போது ஐயப்பன் தன் கோபத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். கடந்த ஆறு மாதங்கள் முன்னர் சபரிமலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியபோது, அரசின் முடிவைக் கண்டு மாநிலத்தின் இந்துக்கள் கொந்தளித்தார்கள். அப்போது கடும் மழைப் பொழிவும் ஆற்றில் பெருகிய வெள்ளப் பெருக்கும் மாநிலத்தை சீரழித்தது. அதுவும் சரியாக, சபரிமலை இருக்கும் தென் மற்றும் மத்திய கேரளத்தில்! ஐயப்பனின் கோபத்தால் ஏற்பட்ட இயற்கைச் சீற்றமே இது என்று, ஐயப்பனின் மேல் நம்பிக்கை கொண்டிருந்த பெண்கள் மாநில அரசுக்கு சாபம் விடும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

கடவுள் மனித உருவில் வருவார் என்று இந்துக்கள் நம்புவதற்கு ஏற்ப, பக்தர்களாகிய மக்களின் வடிவில் ஐயப்பன் ஆட்சி புரிவோருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கருத்துகளைத் தெரிவிக்கின்றார்கள் பலரும்!

சபரிமலையில் பெண்கள் சென்று வழிபாடு நடத்தியதைத் தொடர்ந்து, கேரளத்தின் பல இடங்களில் இன்று போராட்டம் வெடித்தது. சபரிமலை சந்நிதானத்தில் அதிகாலை 3 மணி அளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா இருவரும் தேவஸ்தான ஊழியர்கள் செல்லும் வழியில் அழைத்துச் செல்லப் பட்டு, சந்நிதி முன்னர் நிறுத்தப் பட்டனர். இந்தத் தகவல் வெளியானதும், கேரளம் கொந்தளித்தது. சந்நிதி நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைகள் மேற்கொள்ளப் பட்டன. பின்னர் வெகு நேரம் காத்திருந்து ஐயப்பனைக் காண வந்த பக்தர்களுக்காக நடை மீண்டும் திறக்கப் பட்டது.

நடுத்தர வயதுப் பெண்கள் இருவர் சபரிமலை சந்நிதிதானத்துக்குச் சென்று வந்ததை கேரள முதல்வர் பிணராயி விஜயன் உறுதி செய்தார். இதனால் மாநிலம் மேலும் அமைதியிழந்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதனால், மாநில அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு சபரிமலை கர்மா சமிதி, அந்தராஷ்ட்ர ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக.,வும் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், மாநிலத்தின் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. உடனடியாக மக்கள் திரண்டு, அங்கங்கே ஊர்வலங்கள் நடத்தினர். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன் பாஜக., மற்றும் ஆளுங்கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தலைமைச் செயலகம் முன் டயர்களை எரித்து போராட்டம் நடத்திய பாஜக.,வினர் முதல்வர் பிணராயி விஜயனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் மாநிலத் தலைநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மத்திய கேரளத்திலும் இந்தப் போராட்ட்டங்கள் பரவின. ஆலப்புழாவில், பாஜக., மாவட்டத் தலைவர் கைது செய்யப் பட்டார். மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

செங்கானூர், ஆலப்புழா முதலிய இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருசூர், கொடுங்கலூர் ஆகிய இடங்களில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

தென் கேரளமான கொல்லம், கொட்டாரக்கராவில் இன்றே கடைகளை அடைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை உள்ள பத்தனம்திட்ட மாவட்டத்தில் தனியார் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. கொல்லஞ்சேரியில் கேரள அரசு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

வட கேரளத்திலும் போராட்டத்தின் சுவடுகள் பரவின. பாலக்காடு, காசர்கோடு ஆகிய இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

கொச்சி எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் நாம ஜெப கூட்டங்கள் அதிகம் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு நாம ஜபம் செய்தார்கள். மேலும் சபரிமலை ஐயப்பனின் படத்தை வைத்துக் கொண்டு தெருக்களில் இறங்கி நாம ஜெபம் மேற்கொண்டார்கள்

கொச்சி நகரத்தில் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். ஐயப்பனின் படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று முக்கியமான சாலையின் நடுவில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் பொருட்டும் அழிக்கும் பொருட்டும் பிணராயி விஜயன் அரசு செயல்படுவதாக ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினார்கள்

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற பிஎஸ்ஜி தலைவர் டாக்டர் கே எஸ் ராதாகிருஷ்ணன் கூறுகையில் சபரிமலை நம்பிக்கைகளிலும் இந்து மத நடைமுறைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்காக கேரள அரசு பெரும் பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறது! ஒரு அரசாங்கமே இப்படி ஒரு தரப்பு மக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதற்கு முன்னிறங்கியிருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மிக மோசமான ஒன்று என்று அவர் கருத்து தெரிவித்தார்

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
sabarimalai protest in kochi2 - 2026

எர்ணாகுளம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் நாமஜபக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. வட்டாஞ்சேரி சேர்லாயில் சபரிமலை சம்ரக்ஷண சமிதி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பிணராயி விஜயன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, நடுவீதியில் எரிக்கப்பட்டது. அங்கமாலி பகுதியிலும் ஊர்வலங்கள் நடைபெற்றன!

மழை பெய்த போது அணைகளை சரியாக நிர்வகிக்காமல், வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி, மக்களை சாகடித்து, உண்டியல் குலுக்கி வெளிநாடுகளிடம் பிச்சை எடுத்த கேரள கம்யூனிஸ்ட் அரசு, இப்போது தங்கள் கட்சிக் கொள்கையை கிறிஸ்தவ சர்ச் மீது திணிக்க முற்படாமல் சபரிமலை விவகாரத்தில் மட்டும் திணிக்க முற்பட்டு மக்களின் கோப வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img