கம்யூனிஸ்ட்கள் ஆளும் கடைசி மாநிலமாக தற்போது கேரளம் திகழ்கிறது. இதற்கு முடிவுரை எழுதியுள்ளார் அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்.
இரண்டரை மாநிலங்களில் மட்டுமே இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, மேற்குவங்கத்தில் மம்தாவினால் துடைத்தெறியப் பட்டது. வன்முறைகளுக்கும் கொலை வெறிக்கும் மட்டுமே தங்களை பயன்படுத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட்கள், மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக அவ்வப்போது வன்முறையைத் தூண்டிவிட்டு பதிலடி பெற்றுக் கொள்கின்றனர். இன்னொரு (அரை) மாநிலமான திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் துடைத்தெறியப் பட்டார்கள். அங்கே பாஜக., அவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
தற்போது தனக்குத்தானே குழிவெட்டிக் கொண்டுள்ளார் கேரளத்தை ஆளும் கம்யூனிஸ முதல்வர் பிணராயி விஜயன். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட கொள்ளிக்கட்டைதான் சபரிமலை எனும் தீப்பற்றி எரியும் விவகாரம்!
கேரளத்தில் சர்ச்சுகள் விவகாரத்தில் வாய் அடக்கி மௌனியாக இருந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, இந்த உத்தரவை அமல்படுத்தினால் மாநிலம் கொந்தளிக்கும் என்று பதில் கொடுத்தவர், தற்போது சபரிமலை விவகாரத்தில் வலுக் கட்டாயமாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் ஒரு படி மேலே போய், இந்துக்கள் என்றால் ஏமாளிகள் என்று செயல்பட்டார். அதன் விளைவு, மாநிலம் இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஆப்பசைத்த குரங்கு போல், சபரிமலை விவகாரத்தில் மாட்டிக் கொண்டு முழித்தாலும் தன் பிடிவாதத்தை மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார் பிணராயி விஜயன். சபரிமலையில் இரு பெண்கள் வழிபாடு செய்த போது, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதைக் கண்டு கேரளத்து ஹிந்துக்கள் கைகொட்டிச் சிரிப்பதுடன், முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் கம்யூனிஸ பொய்களை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!
பிணராயி விஜயன் செய்தியாளர்களிடம் கருத்து கூறியபோது, சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். ஐயப்பனை தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டியது போலீசாரின் கடமை. கேரள அரசும் தனது கடமையை தான் செய்தது. சபரிமலை வரும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். இரண்டு பெண்களும் தரிசனம் செய்த போது பக்தர்கள் யாரும் எதிர்க்க வில்லை. அப்போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைக்கு பாஜக,,வே காரணம். பெண் பக்தர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்கும் என்று மேலும் தன் பிடிவாத குணத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அந்தப் பெண்கள் எப்படி சபரிமலை கொண்டு வரப் பட்டார்கள், எந்த நேரத்தில் கோயிலுக்கு வரவழைக்கப் பட்டார்கள், என்பதெல்லாம் கேரளத்து மக்களுக்கு அத்துபடி. இருந்தும் பொய் சொல்லும் பிணராயி விஜயனுக்கு மக்களின் உருவில் ஐயப்பனே பதில் கொடுப்பான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் பக்தர்கள்.