புது தில்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபன் ஹசாரிகா மூவருக்கும் பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.26 நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகரும் முன்னாள் எம்.பி.யுமான அமரர் நானாஜி தேஷ்முக், அமரரான டாக்டர் கவிஞர் பூபன் ஹசாரிகா மூவருக்கும் வழங்கப்படுகிறது! இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள மூவர் குறித்தும் டிவிட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
பிரணாப் முகர்ஜிக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி, மிகச் சிறந்த அறிவாற்றல் கொண்டவர் பிரணாப் முகர்ஜி. நாட்டுக்காக தன்னலமின்றி அயராது பாடுபட்டுள்ளார்!
பூபன் ஹசாரிகா குறித்து பதிவிட்டுள்ள கருத்து: இசை மற்றும் பாடல்கள் பல தலைமுறைகளைக் கடந்தும் மக்களால் ரசிக்கப்படுகிறது. இந்திய இசையை உலகம் முழுதும்கொண்டு சென்று ஒளிரச் செய்தார்.
அமரர் நானாஜி தேஷ்முக் குறித்த பதிவில், கிராமப்புற வளர்ச்சிக்கு நானாஜி தேஷ்முக்கின் பங்களிப்பு, கிராமத்தில் வசிப்பவர்கள் அதிகாரம் பெற புதிய பாதையை காட்டியது – எனக் கூறியுள்ளார்.