பீகார் மாநிலத்தில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று அதிகாலை 4 மணியளவில் பீகார் மாநிலம் வைஷாலி அருகே உள்ள ஷகாதை பஸர்க் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமான பயணிகள் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான சம்பவத்திற்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் ரயில்வே சார்பில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 ம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ உதவிகளும் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.