எனதருமை நாட்டுமக்களே! மனதின் குரலுக்காக உங்களின் ஆயிரக்கணக்கான கடிதங்களும் கருத்துக்களும், பல்வேறு வழிகளில் என்னை வந்து
சேர்கின்றன.
இந்த முறை நான் உங்கள் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்த போது, அதில் ஆதிஷ் முகோபாத்யாயா அவர்களின் சுவாரசியமான ஒரு கருத்து என் கவனத்தை ஈர்த்தது. 1900ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று ஆங்கிலேயர்கள் பிர்ஸா முண்டாவைக் கைது செய்த போது அவரது வயது வெறும் 25 தான். அதே போல மார்ச் மாதம் 3ஆம் தேதி தான் ஜம்சேட்ஜி டாடா அவர்களின் பிறந்த நாள் என்பதும் கூட ஒரு தற்செயல் நிகழ்வு தான் என்று எழுதியிருக்கிறார்.
மேலும் அவர், இந்த இரண்டு மனிதர்களும் முழுமையாக இருவேறுபட்ட குடும்பப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த இருவருமே ஜார்க்கண்டின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையுமே நிறைவானதாக ஆக்கியிருக்கின்றார்கள். மனதின் குரலில் பிர்ஸா முண்டா, ஜம்சேட்ஜி டாடா ஆகியோருக்கு ச்ரத்தாஞ்சலிகளை அளிப்பது என்பது ஒருவகையில் ஜார்க்கண்டின் கௌரவமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றுவதற்குச் சமமானதாகும்.
ஆதிஷ் அவர்களே, நீங்கள் கூறுவதை நான் முழுமையாக ஏற்கிறேன். இந்த இரண்டு மகத்தான மனிதர்கள் ஜார்க்கண்டின் பெயரை மட்டுமல்ல, நாடு முழுவதன் பெயருக்குமே ஒளி கூட்டியிருக்கின்றார்கள். நாடு முழுமையுமே இவர்களின் பங்களிப்பிற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நமது இளைஞர்களுக்கு வழிகாட்டுதலுக்காக ஒரு உத்வேகம் நிரம்பிய மனிதர் இன்று தேவைப்படுகிறார் என்றால், அவர் தான் பகவான் பிர்ஸா முண்டா.
ஆங்கிலேயர்கள் கயமைத்தனமாகவும் நயவஞ்சகமாகவும் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஏன் இப்படிப் பட்டதொரு கயமையைக் கைக்கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஏனென்றால், அத்தனை பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஆங்கிலேயர்கள் கூட அவரைக் கண்டு அஞ்சினார்கள் என்பதால் தான். பகவான் பிர்ஸா முண்டா தனது பாரம்பரியமான வில் அம்புகளின் துணை கொண்டு, துப்பாக்கிகள் பீரங்கிகளைப் பயன்படுத்தும் ஆங்கிலேய ஆட்சியை உலுக்கியிருந்தார். உண்மையில் மக்களுக்கு கருத்தூக்கம் அளிக்கக்கூடிய ஒரு தலைமை கிடைக்குமானால், ஆயுதங்களின் சக்தியை விட சமூகத்தின் மனவுறுதி மிகப் பெரியதாகி விடுகிறது. பகவான் பிர்ஸா முண்டா ஆங்கிலேயர்களோடு அரசியல் சுதந்திரத்திற்காக மட்டும் போரிடவில்லை, அவர் பழங்குடியினத்தவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் போராடினார்.
தனது குறுகியகால வாழ்க்கையில் அவர் இவையனைத்தையுமே செய்து காட்டினார். வஞ்சிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு இலக்கானவர்கள் ஆகியோரை இருள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஒளிபடைத்த சூரியனை நோக்கி அழைத்துச் சென்றார். பகவான் பிர்ஸா முண்டா தனது 25 ஆண்டு கால வாழ்க்கை முடிவில் தியாகியானார். பிர்ஸா முண்டாவைப் போல பாரத அன்னையின் சத்புத்திரர்கள், தேசத்தின் அனைத்து பாகங்களிலும் தோன்றியிருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த சுதந்திரப் போரில் பங்களிப்பு அளிக்காத பகுதி என்ற ஒன்றை இந்தியாவில் எங்குமே காணமுடியாது எனும்படியாக அங்கிங் கெனாதபடி அனைத்து இடங்களிலும் இப்படிப்பட்ட மஹா புருஷர்கள் நிரம்பி யிருந்தார்கள். ஆனால் துர்பாக்கியம் என்னவென்றால் இவர்களின் தியாகம், சூரம், தியாகம் பற்றிய கதைகள் புதிய தலைமுறையினரைச் சென்று சேரவே இல்லை. பகவான் பிர்ஸா முண்டா போன்றவர்கள் நம் இருப்பை நமக்கு uணர்த்தி யிருக்கிறார்கள் என்றால், ஜம்சேட்ஜி டாடா போன்ற மனிதர்கள் தேசத்திற்கு மகத்தான நிறுவனங்களை அளித்தார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஜம்சேட்ஜி டாடா அவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தீர்க்கதரிசி.
அவர் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டும் பார்க்கவில்லை, அதற்கான பலமான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தார்.
பாரதத்தை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் அச்சாணியாக ஆக்குவது தான் எதிர்காலத் தேவையாக இருக்குமென்று அவர் மிக நன்றாக உணர்ந் திருந்தார். அவரது தொலைநோக்கு காரணமாகவே Tata Institute of Science நிறுவப் பட்டு, இப்போது அது இந்திய அறிவியல் கழகம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இதுமட்டுமல்ல, அவர் டாடா ஸ்டீல் போன்ற நம்பகத்தன்மை மிகுந்த பல நிறுவனங்களையும் தொழில்களையும் நிறுவினார்.
ஜம்சேட்ஜி டாடாவும் ஸ்வாமி விவேகானந்தரும் அமெரிக்கப் பயணத்தின் போது ஒரு கப்பலில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது இருவரின் உரையாடல்களும், ஒரு மகத்துவம் நிறைந்த விஷயமான, பாரத நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பரவலாக்கத்தை ஒட்டி அமைந்தது. இந்த உரையாடலின் விளைவாகவே இந்திய அறிவியல் கழகம் பிறந்தது.
மனதின் குரல் – 53வது பகுதி
24.2.2019 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்