ரஃபேல் விவகாரத்தில் பொய் சொன்னதை ஒப்புக் கொண்டார் ராகுல் காந்தி!
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் திருடர் என்று சொன்னார். காவல்காரன் என்று பிரதமர் மோடி தம்மை சொல்லிக் கொள்வதை வைத்து “காவல்காரன் களவாணி” என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது என்று பேசினார் ராகுல். ஆனால் இதை அப்பட்டமான பொய் என்றும் ராகுல் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்றும் பாஜக வழக்கறிஞர் மீனாட்சி லேகி வழக்குத் தொடர்ந்தார்.
தாங்கள் பிரதமர் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் விவகாரத்தை மறு விசாரணைக்கு மட்டுமே ஏற்றுக் கொண்டதாகவும், நீதிமன்றம் சொல்லாத விஷயத்தை எப்படி நீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி சொல்லலாம் என்றும் கேட்டு விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதில் இன்று காலை ஆஜரான ராகுலின் வழக்கறிஞர்கள் அவரது பதிலை தாக்கல் செய்தனர். அதில் “நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் தமக்கு இல்லை. ஆனால் ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்று தாமும் தமது காங்கிரஸ் கட்சியும் நம்புவதாகவும், அதனை தேர்தலில் பிரச்சாரம் செய்ததாகவும் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.
பிரச்சாரத்தின் சூட்டில் ஒரு இடத்தில தான் பேசிய பேச்சில் காவல்காரர் களவாணி என்ற கோஷத்தைச் சொல்லி, ரஃபேல் விவகாரம் மறுவிசாரணைக்கு வருவதையும் சொன்னதாகவும், டிசம்பர் 14, 2018 தீர்ப்பு இறுதியானது அல்ல என்று சொன்னதாகவும், ஆனால் தன் பேச்சின் பொருள் நீதிமன்றம் அந்த குறிப்பிட்ட கோஷத்தைச் சொன்னது போல் அமைந்துவிட்டதாகவும், அதை எதிர்கட்சிகள் ஊதிப்பெரிதாக்கிவிட்டன என்றும் சொல்லியிருக்கிறார்.
இதற்காக வருத்தம் தெரிவித்த அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் நமக்குத் துளியும் இல்லை என்றும் தெரிவித்தார். நீதிமன்றம் டிசம்பர் 14, 2018ல் ரஃபேல் வழக்குத் தள்ளுபடி செய்ததை தமக்கு வெற்றி என்று பாஜக தலைவர்கள் பேசியதையும் அவர் குறிப்பிட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்களே அரசியல் பேச்சில் பயன்படுத்தி உள்ளனர் என்றும் தான் அப்படிச் செய்யவில்லை என்றும் சொல்லியுள்ளார்.
ராகுல்காந்தி சொன்ன பொய்யை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டதை பாஜக தலைவர் மீனாட்சி லேகி வரவேற்றுள்ளார். ராகுல் சொன்னது பொய்த் தகவல் என்று தாம் மனுவில் சொன்னது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், தமக்கு வேண்டியது ராகுல் சொன்னது பொய் என்ற நிரூபணமே அது நடந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் ரஃபேல் பற்றிய காங்கிரஸின் பிரச்சாரம் பலத்த அடி வாங்கியுள்ளது. ராகுல்காந்தி கோர்டில் மன்னிப்புக் கேட்டதை பாஜக பெரிய அளவில் மீதமுள்ள தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும். இந்நிலையில் ராகுலுக்கு மேலும் சிக்கல் சேர்க்கும் வகையில் அவரது கல்வித்தகுதி, பிரிட்டிஷ் குடியுரிமை ஆகிய விவகாரங்கள் வேட்பு மனு பரிசீலனையில் விசுவரூபம் எடுக்கின்றன.
ராகுல்காத்தியின் அரசியல் எதிர்காலம் குறித்து மிகுந்த பரபரப்பை இந்த விவகாரங்கள் ஏற்படுத்தி உள்ளன. நேரு-காந்தி குடும்பத்தை ஒட்டியே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அரசியல் விவகாரங்கள் நடந்து வருவதால் கட்சியின் எதிர்காலம் குறித்தும் அரசியல் விமர்சகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
- அருண்பிரபு ஹரிஹரன்