ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஃபானி புயலை துல்லியமாகக் கணித்து அரசுக்கும் அது எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் துல்லியமாகக் கூறி பெரும் உதவி செய்ததாகவும் ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
கஜாவை விட பெரிய புயலை ஒடிசா அரசு எப்படி சாமர்த்தியமாக சமாளித்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன. எனினும் இவ்வளவு பெரிய புயலிலும் கூட அங்கு மனித மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு மிக குறைவு என்பது ஆச்சரியப் படும் விஷயம்.
இது குறித்துக் கூறியுள்ள ஒடிசா மாநில முதல்வர், “24 மணி நேரத்தில் இரவோடு இரவாக 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கஞ்சம் பகுதியிலிலிருந்து 3.2 லட்சம் பெரும், பூரியில் இருந்து 1.3 லட்சம் பெரும் வெளியேற்றப்பட்டனர். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 9000 முகாம்கள் அமைக்கப்பட்டு 7000 இடங்களில் சமைக்கப்பட்டு உணவு மக்களுக்கு தரப்படுகிறது.
இந்த மாபெரும் பணியில் 45,000 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை வந்துள்ள அறிக்கையின்படி இறப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய இந்த இயற்கைப் பேரழிவை திறமையாக எதிர்கொண்ட ஒடிசா அரசை பலரும் பாராட்டி வருகின்றனர்.