16ஆவது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேஜ., கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், 16-வது மக்களவையைக் கலைக்க பரிந்துரை செய்யப் பட்டது.
பின்னர், அமைச்சரவையைக் கலைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி.
இதை அடுத்து, புதிய அரசு ஏற்படுத்தப் படும் வரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்கட்டும் என்று கேட்டுக் கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவரிடம் முறைப்படி அளித்தார். இதை அடுத்து, அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 16ஆவது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.




