திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஒய் வீ சுப்பா ரெட்டியின் பெயரை நிச்சயம் செய்தார் ஜெகன். ஆனால்…
திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் பதவிக்கு ஆந்திர அரசு ஒய் வீ சுப்பா ரெட்டியை தேர்ந்தெடுத்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இவர் ஜெகனுக்கு நெருங்கிய உறவினர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை நடிகர் மோகன்பாபுவுக்கு கொடுக்கப் போகிறார் என்று சில நாட்கள் முன்பு செய்தி வெளிவந்தது. ஆந்திரத்தில் ஒய் எஸ் ஆர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மனும் நிர்வாக உறுப்பினர்களும் மாறுவார்கள் அல்லது மாற்றப் படுவார்கள் என்ற செய்தி சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மனாக உள்ள ‘புட்டா சுதாகர் யாத’வின் இடத்தில் வேறொருவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று பேச்சு அடிபட்டது. இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மனாக ஒய் வீ சுப்பாரெட்டியின் பெயரை ஜகன் தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜெகனின் சித்தப்பாதான் ஒய் வீ சுப்பா ரெட்டி. இவர் சென்ற தேர்தலில் ஓங்கோலிலிருந்து மக்களவைக்கு போட்டியிட விரும்பினார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய் எஸ் ஆர் கட்சிக்குத் தாவிய “மாகுண்ட்ட ஸ்ரீனிவாசலு ரெட்டி”க்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சுப்பா ரெட்டிக்கு ஜகன் வாய்ப்பளிக்க வில்லை. அதனால் அவர் கொஞ்சம் மனவருத்தத்தோடு இருந்தார்.
திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை ஒய் வீ சுப்பாரெட்டிக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்தார் ஜெகன் . தனக்கு மாநிலங்களவை சீட் வேண்டும் என்று ஜெகனை கேட்டுள்ளார் சுப்பா ரெட்டி. முதலில் திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தன் சித்தப்பாவை ஜெகன் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகக விரைவிலேயே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்று கூறப் படுகிறது.
ஜெகனின் தாயார் விஜயம்மாவின் தங்கை சுவர்ணலதாவின் கணவர்தான் ஒய்வீ சுப்பா ரெட்டி. கோதாவரி மாவட்டங்களுக்கு தொடர்புடைய ஒயெஸ்ஸார் கட்சியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். 2014 தேர்தலில் ஓங்கோல் எம்பியாக வெற்றி பெற்ற இவர் …ஆந்திரப் பிரதேச சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் கோரிக்கை வைத்து தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜெகன் முதலமைச்சர் ஆனவுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன் பதவியில் இருந்து இயக்குனர் ராகவேந்திர ராவ் விலகினார். இது பரபரப்பாகப் பேசப் பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவியை திரைப்பட நடிகர் மோகன்பாபுவுக்கு கொடுக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மோகன்பாபு மீடியாவை கேட்டுக்கொண்டார்.
தற்போது தேவஸ்தான சேர்மனாக உள்ள சுதாகர் யாதவ் பதவியிலிருந்து விலக மறுத்து விட்டார் . எனவே தனி அரசாணை மூலம் தற்போதைய நிர்வாகக் குழுவை கலைத்து விட ஏற்பாடு செய்துவருகிறது ஆந்திரப் பிரதேச அரசு. இதற்கு கடும் எதிர்ப்பும் புயலும் கிளம்பியுள்ளது.