16 ஆயிரம் ரூபாயில் மகளின் திருமணத்தை முடித்த ஐஏஎஸ் அதிகாரி வசந்தகுமார் இப்போது திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராகப் பதவி வகித்துவரும் ஸ்ரீனிவாசராஜுவை ஆந்திர அரசு பணியிலிருந்து மாற்றியுள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக ஸ்ரீனிவாச ராஜுவின் இடத்தில் வசந்த் குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மனாக பொறுப்பேற்ற ஒய்வி சுப்பா ரெட்டி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழுவை மாற்றி அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு ஏற்ப மாற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன.
ரோசையா ஆட்சிக் காலத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட ஸ்ரீனிவாசராஜுவின் இடத்தில் வசந்த்குமாரை நியமித்து ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசாகா மெட்ரோபாலிட்டன் டெவலப்மெண்ட் அதாரிடி VMDA வின் துணைத் தலைவராக உள்ள வசந்தகுமாருக்கு கூடுதலாக இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அரசு. உடனடியாக திருமலா திருப்பதி தேவஸ்தான ஜேஇஓ.,வாக பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீனிவாச ராஜுவுக்கு அரசு இன்னும் எந்தப் பொறுப்பையும் அளிக்கவில்லை. அடுத்த பணியிடத்துக்காக, பொது நிர்வாகத் துறையிடம் தகவல் அளிக்குமாறு அரசு அவருக்கு உத்தரவிட்டுள்ளது .
பி. வசந்தகுமார் முன்பு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் நரசிம்மனின் செயலாளராகப் பணியாற்றினார். 2012இல் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்ற அவர் விசாகா நகர் வளர்ச்சித் துறையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
2017இல் வெறும் பதினாறு ஆயிரத்து நூறு ரூபாய் செலவில் தன் மகளுக்கு திருமணம் செய்து செய்திகளில் அதிகம் உலாவந்தார். 2019 பிப்ரவரியில் வெறும் 18 ஆயிரம் ரூபாயில் தன் மகனுக்கு திருமணம் செய்து மீண்டும் செய்திகளில் பேசப்பட்டார். மகனின் திருமணத்திற்கு பெண் வீட்டாரும் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்தனர்.
தன் இரு பிள்ளைகளின் திருமணத்திலும் விருந்தினர்களிடம் இருந்து மலர்ச் செண்டுகளோ, பரிசுப் பொருள்களோ இவர் பெறவில்லை. உங்கள் காணிக்கைகள் வேண்டாம். ஆசிகள் போதும் என்று திருமணப் பத்திரிக்கையில் தெளிவாக எழுதி யிருந்தார். அவரது எளிமை அப்போது பெரிதாக பேசப் பட்டது. அவர் தற்போது தேவஸ்தான இணை செயல் அலுவலர் ஆகியிருக்கிறார்.