
1983ஐப் போல் 2019லும் இந்திய அணி வெற்றி பெறும் என்று உற்சாகமூட்டிய பாட்டிக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிளாஸ்டிக் பீப்பீ ஊதி, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார் 87 வயதுப் பாட்டி. அதன் மூலம் மீடியா உள்பட ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் அவர் கவர்ந்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நேற்று பர்மிங்காம் நகரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணியை 28 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கொண்டு, அரையிறுதிக்கு முன்னேறியது.
அந்தப் போட்டியின் போது, காலரியில் அமர்ந்திருந்த இந்திய அணி ரசிகர்களை, இந்திய அணி வீரர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது 87 வயது மூதாட்டியான சாருலதா படேல் என்பவர், இந்தியக் கொடியைக் கையில் ஏந்தி, பிளாஸ்டிக் பீப்பியை வைத்துக் கொண்டு, உற்சாகம் ஊட்டினார். அவரை சந்தித்து அவருக்கு வணக்கம் சொன்னார் விராட் கோலி. அவரை அழைத்து தலையில் கை வைத்து ஆசி அளித்த சாருலதா படேல், இந்திய அணி 1983ஐப் போல் 2019லும் வெற்றி பெறும் என்றார்.
தொடர்ந்து, ரோஹித் சர்மாவும் பாட்டியிடம் ஆசி பெற்றார். இதனை ஊடகங்கள் பலவும் தனியாக கவர் செய்து கவர்ந்தன. இதை அடுத்து பாட்டி மீது ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியது.
தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போது இந்திய வீரர்கள் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினர். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த மூதாட்டி சாருலதா படேல், தேசிய கொடியை அசைத்து, பிளாஸ்டிக் ‘பீ்ப்பீ’யை ஊதி இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார். அந்தக் காட்சிகள் ஊடகங்களில் அதிகம் ஒளிபரப்பாகின.
Also would like to thank all our fans for all the love & support & especially Charulata Patel ji. She’s 87 and probably one of the most passionate & dedicated fans I’ve ever seen. Age is just a number, passion takes you leaps & bounds. With her blessings, on to the next one. ???????????? pic.twitter.com/XHII8zw1F2
— Virat Kohli (@imVkohli) July 2, 2019
இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் சாருலதா பாட்டியுடனான சந்திப்பு புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விராட் கோலி. அதில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி. குறிப்பாக சாருலதா படேல். வயது 87 என்றாலும், வயது என்பது ஒரு எண் தான். இவர் போன்ற உற்சாகமூட்டும் ரசிகர்களை வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. அவரது ஆசி எங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார்.
இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் உற்சாகத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.


