காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று மதியம் அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் வந்து தரிசித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அபூர்வ அத்திவரதர் தரிசன சேவை நடைபெற்று வருகிறது. அத்திவரதரை ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்து வருகின்றனர்.
அத்தி வரதரை தரிசிக்க வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலன்களில் இருந்தும் பக்தர்கள் பலர் வருகின்றனர். அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், விஐபி.,க்கள் என பலர் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசிக்க வந்திருந்தார்.
விமானம் மூலம் சென்னை வந்த குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் காஞ்சிபுரம் வந்தனர். அங்கு அவரை ஆட்சியர் பொன்னையா வரவேற்றார்.
கோயிலுக்கு வந்த அவருடன், ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர் உதயகுமார் ஆகியோரும் வந்தனர். வரதராஜ பெருமாள் ஆலயத்தில் குடியரசுத் தலைவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.