தெலங்கானா மாநில அரசு இப்போது மகாராஷ்டிர அரசிடம் பத்து கழுகுகள் வேண்டும்… அனுப்புங்கள் ப்ளீஸ்… என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது. தெலங்காணா அரசு மகாராஷ்டிர அரசிடம் இது குறித்த விண்ணப்பத்தை முறையாக அனுப்பியிருக்கிறது.
தெலங்காணா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்களுக்கு இடையே நல்லுறவும் நட்புறவும் திகழ்ந்து வருகிறது. அது அண்மைக் காலத்தில் நன்றாக வெளியில் தெரிந்தது.
தெலங்கானா மாநில அரசு நிறைவேற்றிய காளேஸ்வரம் நீர்த் திட்டத்திற்கு உதவும்படி அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவ் அரசு மகாராஷ்டிரத்தின் பட்நவிஸ் அரசிடம் கேட்டிருந்தது. அதற்கு பட்னவிஸ் அரசு சாதகமாக பதில் அளித்து அண்டை மாநிலமான தெலங்கானாவுடன் நட்பு பாராட்டியது.
அண்மையில் காளேஸ்வரம் திட்ட தொடக்க விழாவிற்கு பட்னாவிசை முக்கிய விருந்தினராக அழைத்து இருந்தார் தெலங்காணா மாநில முதல்வர் கேசிஆர். அதன்படி, தேவேந்திர பட்னவிஸும் வந்து கலந்து கொண்டார்.
இந்நிலையில், புதிதாக தெலங்காணா வனத்துறை அதிகாரிகள் தங்களுக்கு பத்து கழுகுகள் தேவைப்படுவதாக மகாராஷ்டிராவை கேட்டுக் கொண்டுள்ளார்கள். கழுகு இனத்தை பெருக்குவதற்காக கட்சிரோலி என்ற இடத்திலிருந்து ஐந்து ஜோடி கழுகுகளை ஹைதராபாத்துக்கு எடுத்து வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தெலங்காணா வன விலங்கு பாதுகாப்புத் துறை, தற்போது கழுகு பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு மத்திய வனவிலங்குகள் பூங்கா அமைப்பின் விதிகள் சாதகமாகவே உள்ளன. அதன் ஒரு பகுதியாக, அண்டை மாநிலத்தில் இருந்து கழுகுகளைக் கொண்டு வர தெலங்காணா அரசு முடிவு செய்துள்ளது.
நேரு வனவிலங்குகள் பூங்காவில் தற்போது 12 கழுகுகள் உள்ளன. இவற்றில் கழுகுகளின் குறைந்தபட்ச வயதாக 35 உள்ளது. 35 வயதுக்கும் மேலான வயதான கழுகுகளே இங்கு உள்ளன. கழுகுகளின் ஆயுள் 40லிருந்து 45 ஆண்டுகள் மட்டுமே!எனவே மகாராஷ்டிராவில் இருந்து கழுகுகளைக் கொண்டு வர தெலங்காணா அதிகாரிகள் விரும்புகின்றனர்.
இது குறித்து தெலங்காணா வனத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிர அதிகாரிகளுக்கு பிப்ரவரி 16இல் கடிதம் எழுதினர்! கட்சிரோலியில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று! இதற்கு அங்கிருந்து பதில் வரவே 7 பேர் கொண்ட குழு கட்சிரோலி பயணித்து 9 கழுகுகளைத் தேர்ந்தெடுத்தது. மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்து விட்டால் இந்தக் கழுகுகள் ஹைதராபாத் வந்து சேரும்.