ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு… வரிசையில் ‘முத்தலாக்’…! ஓவைஸி கொடுத்த அதிர்ச்சி!

Published:

Asaduddin Owaisi - 2026

ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு.. இவை எல்லாம் கிரிமினல் குற்றம் அல்ல எனும் போது,  முத்தலாக்கை மட்டும் கிரிமினல் குற்றமாக சித்திரிப்பதா என்று ஓவைஸி கேள்வி எழுப்பி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்வதை கிரிமினல் குற்றம் ஆக்கி தண்டனை விதிக்க வழி செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019 மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பில் ஆதரவாக 302 பேரும் எதிர்த்து 82 பேரும் வாக்களித்தனர்.

முத்தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வது சட்டப்படி செல்லாது என்று ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இதன் தொடர் நடவடிக்கையாக முத்தலாக் விவகாரத்தை கிரிமினல் குற்றம் ஆக்கி தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

07 Aug09 Triple talak - 2026கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற இயலவில்லை. இதனால் இது குறித்து அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பிறப்பித்தது.

இந்த அவசரச் சட்டத்தை மாற்றி அமைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, சட்டமாக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் விவாதத்திற்குப் பிறகு பகுதி வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் வெளிநடப்பு செய்தன.  பாஜக கூட்டணியில் இடம் பெறாத பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் மசோதாவை ஆதரித்தன. இதனால் 302 எம்பிக்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது. 82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி மாநிலங்களவையிலும்  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டம் அமலாக்கப்படும்!

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

முன்னதாக மக்களவையில் இந்த மசோதா மீது நடந்த விவாதத்தின் போது எதிர்ப்புக் கருத்துக்களை தெரிவித்தவர்களில் முக்கியமானவர் அசாதுதீன் ஓவைசி. இவர் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர். இவர் இந்த விவாதத்தின் போது தெரிவித்த கருத்தில் ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு இவையெல்லாம் கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றம் என்று எந்த அடிப்படையில் இந்த அரசு தீர்மானிக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

நாகரிக சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படும் ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு ஆகியவற்றின் வரிசையில் முத்தலாக் முறையையும் அசாதுதீன் ஓவைசி குறிப்பிட்டுள்ளது அவையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மசோதா விவாதத்தின் போது திமுக., எம்பி., கனிமொழி கருத்து தெரிவித்தபோது ஹிந்து, கிறிஸ்துவ பெண்களை ஏமாற்றும் ஆண்களையும் சிறையிலடைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

07 July25 Kanimozhi - 2026இந்து, கிறிஸ்துவ மதங்களில் எத்தனை மனைவியரை வேண்டுமானாலும் சட்ட பூர்வ திருமணம் செய்து கொள்ளலாம் என்ற திருமணச் சட்டம் இல்லை என்பதும், இந்து மதம் முத்தலாக் போன்ற விவகாரத்தை மதப் பழக்கமாக வைத்திருக்கவில்லை என்பதும், ஹிந்து திருமணச் சட்டம் ஹிந்துப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்கெனவே அளித்திருக்கிறது என்பதும், ஹிந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம் குறித்த பாதுகாப்பை ஏற்கெனவே இந்திய சட்டவியல் நடைமுறை அளித்திருக்கிறது என்பதும் வேண்டுமென்றே மறைக்கப் பட்டு அல்லது இவை குறித்து சிறிதளவும் தெரிந்து கொள்ளாமல் ஒரு எம்.பி.,யாக கனிமொழி பேசியிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அறியாமையில் உள்ளவர் நாடாளுமன்ற உறுப்பினரா என்பதும், அல்லது ஏற்கெனவே இவை குறித்து அறிந்திருந்தும் மத மோதலையும் பிரிவினையையும் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே கனிமொழி பேசியிருப்பதும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

ஆனால் அவர் இந்த விவகாரத்தை திசை திருப்பும் நோக்கி, மத ரீதியான வன்மங்களை விதைத்துப் பேசிய போது… ”மத உணர்வை தூண்டும் இந்த மசோதாவை அவசரமாக நிறைவேற்றிய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியதுடன், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசு முன்னுரிமை அளிக்கிறது என்றால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை முதலில் நிறைவேற்றட்டும்! பெண்களின் உரிமைகளை போல் ஆண்களின் உரிமைகளும் முக்கியம். இந்த மசோதா முஸ்லிம் ஆண்களின் உரிமையைப் பறிக்கிறது.. என்றார். அதாவது நாகரிக சமுதாயத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து விட்டு, முத்தலாக் கூறி அந்தப் பெண்களை நிர்கதியாக தவிக்க விட்டுச் செல்வது முஸ்லிம் ஆண்களின் உரிமை என்று கனிமொழி உணர்த்தியிருப்பதும் சபையில் பலராலும் கவனிக்கப் பட்டது.

கனிமொழி மேலும் பேசிய போது… கிறிஸ்தவ இந்து பெண்களின் உரிமையை பாதுகாக்க இந்த அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். ஒரு இந்து ஆண் தனது மனைவியை கைவிட்டால் அவனை ஏன் யாரும் சிறையிலடைப்பது இல்லை என்று கேள்வி எழுப்பியது பலத்த சிரிப்பைத்தான் வரவழைத்தது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

சட்டம் இயற்றும் அவையில் இருந்து கொண்டு, சட்டம் குறித்த நடைமுறை அறிவு இன்றி அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது!

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

  • நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் எலக்ட்ரானிக் சாதனங்களின் மூலமாகவும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது கிரிமினல் குற்றம் என்று கருதப்படும்

  • குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

  • முத்தலாக் குற்றம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் மட்டுமே புகார் அளிக்கலாம்.

  • குற்றம்சாட்டிய பெண்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்திய பின் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கலாம்.

  • குற்றம் சாட்டிய பெண் கோரிக்கை விடுத்தால் வழக்கு பிரச்சனையை மேஜிஸ்ட்ரேட் முடித்து வைக்கலாம். அதற்கான நிபந்தனைகளை மாஜிஸ்ட்ரேட் தீர்மானிக்கலாம்.

  • விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து செய்த கணவரிடமிருந்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் கோரலாம். மைனர் குழந்தைகளை தனது பொறுப்பில் பராமரிக்க அந்தப் பெண் உரிமை கோரலாம். ஜீவனாம்சத் தொகையை மேஜிஸ்ட்ரேட் தீர்மானிக்கலாம்.

  • இவை எல்லாம் இனி இஸ்லாமியப்  பெண்களுக்கு இந்தியச் சட்டம் அளிக்கப் போகும் வாழ்க்கைப் பாதுகாப்பு அம்சங்கள் என்பது  குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img