
ஹயத் நகரில் கடத்தப்பட்ட இளம்பெண் சோனியை ‘அத்தங்கி’ என்ற ஊரில் விட்டுச்சென்றுள்ளான் கடத்தல்காரன். இதை அடுத்து, தெலுங்கு மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய பி பார்மஸி மாணவி கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.
கடத்தல்காரன் ரவிசேகர், சோனியை பிரகாசம் மாவட்டம் அத்தங்கி பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்றுள்ளான். இதை அடுத்து, தனது பெற்றோருக்கு போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார் அந்தப் பெண்!
இளம்பெண் சோனிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, டீக்கடை நடத்தி வந்த சோனியின் தந்தை யாதய்யாவை நம்ப வைத்து ஒரு வாரத்திற்கு முன் கடத்திச் சென்றான் குற்றவாளி ரவிசேகர். போலீஸாரின் தீவிர தேடுதலை அறிந்த ரவிசேகர், இளம்பெண் சோனியை அத்தங்கி பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு மாயமானான்.
இதன் பின்னர், அருகில் இருந்த ஒருவரின் போனைக் கேட்டு வாங்கி அதன் மூலம் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார் சோனி.
சோனியை பஸ்ஸ்டேண்டில் விட்டுச் சென்ற பின்னர், ரவிசேகர் விஜயவாடா நோக்கிச் சென்றதாக தெரிகிறது. தன்னை கடப்பா மாவட்டம் ஒன்டிமிட்டா மற்றும் திருப்பதி அழைத்துச் சென்று இறுதியில் அத்தங்கியில் விட்டுச் சென்றதாக இளம்பெண் சோனி போலீசாரிடம் தெரிவித்தாள்.
செவ்வாய்க் கிழமை இன்று முற்பகல், சோனி ஹைதராபாத் வந்து சேர்ந்தார். அவரிடம் ரவிசேகர் குறித்தும், கடத்தல் குறித்தும் மேலும் விவரங்கள் அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் கில்லாடி கடத்தல்காரன் ரவிசேகர் குறித்த துப்பு போலீஸாருக்கு கிடைக்கவில்லை.
ரவிசேகர் குறித்து துப்பு தருவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளது காவல்துறை. இளம்பெண் சோனியை கடத்திய பின்னர் நல்கொண்டா மாவட்டத்தில் இன்னும் ஒரு மோசடியில் ரவிசேகர் ஈடுபட்டுள்ளான். இந்த முறை வேடத்தை மாற்றி விஜிலென்ஸ் ஆபீஸராக தன்னை காட்டிக் கொண்டு ஒரு வியாபாரியை ஏமாற்றியுள்ளான்.
நல்கொண்டா மாவட்டம் ‘தாமரசர்ல’ மண்டலம் ‘கண்ட்ரபோல்’ என்ற ஊரில் ஒரு எரு வியாபாரியை மிரட்டி, அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாயும் மூன்று மோதிரங்களையும் பறித்துச் சென்றுள்ளான். சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட விஜிலென்ஸ் ஆபீஸரை ரவிசேகராக காவல்துறை அடையாளம் கண்டது. சோனியைக் கடத்திய அதே காரில் சென்று இந்தக் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளான் ரவிசேகர்.
இவரது இந்தக் கொள்ளைகள் இப்போது இரு தெலுகு மாநிலங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.


