
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
இன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சியின் மூலம் அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அரசு மருத்துவமனையில் தற்போது மருத்துவர் பற்றாக்குறை எதுவும் இல்லை. காலி இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு விவகாரத்தில் நல்ல முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து நடந்த மருத்துவமனை தினத்தையொட்டி 30 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.


