மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காஃபி டே நிறுவுனர் சித்தார்த்தாவின் உடல் இன்று காலை மீட்கப் பட்டது.
நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் வைத்துள்ள கஃபே காஃபி டே நிறுவுனரும் தொழிலதிபருமான வி.ஜி.சித்தார்த்தா(58) உடல் 36 மணி நேர தேடுதலுக்கு பிறகு மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் மீட்கப் பட்டது.
தொழில் நஷ்டம், தொழிலைத் தொடர்ந்து நடத்தமுடியாமை, கடன் நெருக்கடி இவற்றால் பெரும் மன அழுத்தத்தில் இருந்த சித்தார்த்தா திங்கள் இரவு நேத்ராவதி ஆற்றுப் பகுதியில் சென்றபோது காரை விட்டு இறங்கி பின்னர் காணாமல் போனார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் போலீசில் புகார் அளிக்கப் பட்டது. இதை அடுத்து அவரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கினர்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த சித்தார்த்தா, கர்நாடக முன்னாள் முதல்வர், அமைச்சர் என பல பதவிகளை வகித்த எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன். தற்போது பாஜக.,வில் சேர்ந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணாவின் மகளைத் திருமணம் செய்து கொண்டவர் சித்தார்த்தா. இவர், 1993இல் கஃபே காஃபி டே என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்களது குடும்பத் தொழிலான காஃபி கொட்டை ஏற்றுமதியில் ஈடுபட்ட வந்த அவர், நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களைத் தொடங்கி தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்.
இடையில் ஐடி.,நிறுவனங்கள் வரவால் அந்தத் துறையிலும் கால் பதிக்க எண்ணி, குழுவாக மைண்ட்ட்ரீ எனும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தையும் தொடங்கி, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். இதுமட்டுமின்றி, கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளித்து வந்த அவர், அண்மைக் காலமாக தொழிலில் ஏற்பட்ட சரிவு காரணமாக கடன்களில் சிக்கித் திணறினார். தொடர்ந்து மைண்ட்ட்ரீ நிறுவனத்தை விற்றார்
இருப்பினும், தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திங்கள் அன்று இரவு பெங்களூரில் இருந்து மங்களுருக்கு காரில் சென்ற சித்தார்த்தா, திடீரென காரில் இருந்து இறங்கி, நேத்ராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் நடந்து சென்றார். தான் பாலத்தில் நடந்து சென்றுவிட்டு, திரும்பி வருகிறேன் என்றும், பாலத்தில் மறு பக்கத்தில் காத்திருக்கும் படியும் கார் டிரைவருக்கு தகவல் கொடுத்துவிட்டு நடந்து சென்றவர், வெகு நேரமாகியும் திரும்பவில்லை.
ஒரு மணி நேரம் கடந்தும் சித்தார்த்தா திரும்பவரவில்லை என்பதால் பதற்றமடைந்த டிரைவர் அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சித்தார்த்தாவின் மொபைல் போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகியிருந்தது. இதை அடுத்து குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தார் டிரைவர்! தொடர்ந்து போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
அண்மைக் காலமாக கடும் மன அழுத்தத்தில் இருந்த சித்தார்தா நேத்ராவதி நதியில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆற்றில் தேடும் பணி தொடங்கியது. கடலோரக் காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் என ஆற்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒன்றரை நாள் தேடுதலுக்குப் பின்னர் அவரது உடல் இன்று காலை 6.30 மணி அளவில் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப் பட்டது.