தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், பெரும்பாலும் அது எல்லை மீறியதில்லை. ஆனால், சமீபகாலமாக இந்த நிலை மாறி வருகிறது.
தங்களுக்கு பிடித்த நடிகருக்காக மற்றொரு நடிகரை மோசமாக விமர்சிக்கும் பழக்கம் ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகர்கள்கூட நட்பாக இருந்தாலும், ரசிகர்கள் மோதிக் கொள்வது என்பதாகிவிட்டது.அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைய சண்டை உலகளவில் பிரபலம். காரணம் டிவிட்டரில் அவர்கள் ஹேஷ்டேக் போட்டு, அதனை டிரெண்டிங்காக்கி சண்டை போட்டுக் கொள்கின்றனர். அப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு .டுவிட்டரில் “#RIPactorVIJAY” என்ற ஹேஷ்டேக் டிரென்டானது. யார் அதை ஆரம்பித்தார்கள் எனத் தெரியவில்லை. அப்படி ஒரு டிரென்டிங்கைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால், அது தொடர்ந்து டிரென்டிங்கிலேயே இருந்தது. அதன் பின்னர் அதற்கு பதிலடியாக ”ஆகஸ்ட்8_பாடைகட்டு” என்ற ஹேஷ்டேக் டிரென்டானது.இது தொடர்பாக கஸ்தூரி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் தங்களது சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்தனர். உலகில் வேறு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது, இப்படி பண்ணலாமா என அவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறி இருந்தனர். ஆனால், அந்த அறிவுரைகள் எதுவும் ரசிகர்கள் காதுகளைப் போய் சேரவில்லை போலும்.ஆம், விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை புழல் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த உமா சங்கர் (32) என்ற அஜித் ரசிகரை, அதே பகுதியைச் சேர்ந்த ரோஷன் (34) என்ற விஜய் ரசிகர் கத்தியால் குத்தியுள்ளார். உமா சங்கர், நடிகர் விஜய் பற்று தரக்குறைவாக பேசியதால், கோபத்தில் கத்தியால் அவரின் தலை, கழுத்து, நெஞ்சு என சரமாரியாக வெட்டியுள்ளார் ரோஷன்.படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்த உமாசங்கரின் உடலை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகவே, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு உமாசங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ரோஷனை கைது செய்த புழல் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.