முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மாரடைப்பால் நேற்று இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இதன் பின்னர் அவரது உடல், தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு, பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மிகச்சிறந்த அரசியல்வாதியான சுஷ்மா ஸ்வராஜ், பொதுவாழ்க்கைக்காக தனது சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் ஒளி வீசியவர். சிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது! கோடிக்கணக்கான மக்களின் உந்து சக்தியாக திகழ்ந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.
பின்னர் இன்று காலை சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுஷ்மா ஸ்வராஜ் குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்த போது, கண்ணீர் விட்டு அழுதார். மோடி.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில், சுஷ்மா ஸ்வராஜ் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பொது வாழ்க்கையில் கண்ணியம், துணிச்சல், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காட்டியவர். மிகவும் நேசித்த தலைவரை நாடு இழந்துவிட்டது. அவர் எப்போதும் இந்தியர்கள் நினைவில் இருப்பார்.. என்று கூறியிருந்தார். அவரும் இன்று காலை சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்த இரங்கல் செய்தியில், சுஷ்மா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மறைவு, இந்தியாவிற்கு பெரிய இழப்பு, ஒரு சிறந்த அரசியல்வாதி, மிகச் சிறந்த எம்.பி.,யாகவும், நல்ல பேச்சாளராகவும், நிர்வாகத் திறன் கொண்ட சிறந்த தலைவராகவும் விளங்கினார்… என்று கூறியிருந்தார்.
பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்ட இரங்கல் செய்தியில், சுஷ்மா சுவராஜ் மறைவு பெரும் வேதனையைத் தந்துள்ளது. இந்திய அரசியலில் தனி முத்திரையைப் பதித்து விட்டு சென்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர், மக்களுக்காக சிறந்த சேவையாற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜ் மறைவு குறித்து தனது அதிர்ச்சியை வெளியிட்ட மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், இப்போதுதான் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டை பார்த்துவிட்டு வந்தேன். அவர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து டிவிட் செய்து இருந்தார். ஆனால் இப்போது அவர் இல்லை. அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் கொஞ்சம்கூட நம்ப முடியவில்லை.. என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜக., செயல் தலைவர் ஜே.பி.நட்டா என பலரும் தங்களது இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேரில் வந்து, சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.