செவ்வாய்க்கிழமை நேற்று இரவு காலமான முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷன் ஜாதவ் சம்பந்தப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியாவின் உயர் வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வேவிடம், தனது கட்டணமான 1 ரூபாயை வசூலித்துக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதுவும் அவர் மாரடைப்பால் மரணம் அடைவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இவ்வாறு அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாக வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே கூறினார்.
“நான் அவருடன் இரவு 8:50 மணிக்கு பேசினேன். இது மிகவும் உணர்ச்சிகரமான உரையாடலாக இருந்தது…. நான் உங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று அவர் சொன்னார். நீங்கள் வென்ற வழக்குக்கு உங்களது ஃபீஸ் ஒரு ரூபாயை நான் உங்களுக்கு வழங்க வேண்டும்… என்றார். நானும் நிச்சயமாக அந்த விலைமதிப்பற்ற கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று சொன்னேன். நாளை 6 மணிக்கு வாருங்கள் என்று அவர் சொன்னார்… என தன் நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து கொண்டார் ஹரீஷ் சால்வே.
கடந்த மாதம், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் வாக்கில், தூதரக அணுகலுக்கான உரிமையை பாகிஸ்தான் மீறியுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மேலும் இஸ்லாமாபாத்தின் இஷ்டப் படி, ஒரு ராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் கூறி, இஸ்லாமாபாதுக்கு அழைப்பு விடுத்தது.
49 வயதான குல்பூஷன் ஜாதவ் தூக்கிலிடப்படுவதைத் தடுக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சுஷ்மா ஸ்வராஜ் வர்ணித்திருந்தார்.