செப்டம்பர் 11,1893 அன்று இன்றைக்கு சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் சிகாகோ மத மகா சபையில் முதன் முதலாக பாரத தேச மகரிஷி விவேகானந்தரின் குரல் எதிரொலித்தது.
தொடக்கத்திலேயே பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஆஃப் அமெரிகா என்ற விளிப்புக்கு கரகோஷம் விண்ணை முட்டியது. அந்தக் கரவொலி அடங்கும் வரை அவருக்கு அளிக்கப்பட்ட நான்கரை நிமிட நேர உரையை அவரால் தொடர இயலவில்லை.
விவேகானந்தரின் முதல் குரலொலிக்கே அந்த உலக மத மகா சபை உணர்ச்சிப் பெருக்கடைந்துவிட்டது. ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர் அங்கிருந்த சுமார் ஆறாயிரம் பார்வையாளர்கள்.
தொடர்ந்த பிரசங்கத்தில் அவர் மிக உயரிய கூற்றுகளை விவரித்தார்.
“உலகத்தில் உள்ள அனைத்து மதங்களுக்கும், அனைத்து நாகரீகங்களுக்கும் தாய் போன்ற ஹிந்து மதத்தின் சார்பில் வந்துள்ள நான் உங்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
யார் எந்த மதத்தின் தர்மத்தை கடைபிடித்தாலும் ஒரே இலக்கை சென்றடைவார்கள் என்று பல யுகங்களுக்கு முன்பே கூறிய இந்து மதத்தில் இருந்து வந்துள்ளேன். நாங்கள் சிறு வயது முதலே செய்துவரும் பிரார்த்தனையில் ஒரு கருத்து உள்ளது என்று கூறி ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தை ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினர். அந்த ஸ்லோகம் இதுதான்.
“ருசீனாம் வைசித்ர்யாத்ருஜுகுடில நாநா பதஜுஷாம்
ந்ருணாமேகோ கம்யஸ்த்வ மஸி பயஸாமர்ண்வ இவ !!”
சுவாமி விவேகானந்தர் சிகாகோவின் நிறைந்த சபையில் கூறிய சுலோகம் இது.
புஷ்பதந்தர் எழுதிய சிவமஹிம்ந ஸ்துதியில் உள்ளது. வட இந்தியாவில் அதிகம் பேர் இந்த ஸ்லோகங்களை படிப்பார்கள். நமக்கு ருத்ரம் நமகம் சமகம் போல் வட இந்தியாவில் இது பிரசித்தம்.
“பல ரகமான மார்க்கங்களும் சாஸ்திரங்களும் உள்ளன. நதிகள் எங்கு பிறந்து எத்தனை விதமாகப் பாய்ந்தாலும் சமுத்திரத்தையே சென்றடைவதுபோல், எந்த மார்க்கத்தை கடைப்பிடித்தாலும் ஒரே பரமாத்மாவையே சென்றடைவோம் என்பது உண்மை. சத்தியம் ஒன்றுதான் என்ற கருத்தொற்றுமையை உலகிற்கு அளித்த பாரத தேசத்தின் ஹிந்து தர்மத்தில் இருந்து வந்துள்ளேன்” என்றார்.
அங்கே இருந்து கொண்டு பாரத தேசத்தின் மதிப்பும் ஹிந்து மதத்தின் சிறப்பும் குறித்து அவர் உரையாற்றிய அந்த நான்கரை நிமிட காலம் அரங்கம் கரவொலியால் நிரம்பி வழிந்தது.
மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் “ஹிந்து மாங்க் ஸ்வாமி விவேகானந்தா சபையில் பிறர் ஆற்றிய உரைகள் எல்லாம் விட மிகச் சிறப்பாக உரையாற்றி அத்தனை ஆயிரம் பேர் பார்வையாளர்களின் உள்ளங்களில் இடம் இடம்பிடித்துவிட்டார். பாரத தேசத்தின் ஹிந்து மதம் இத்தனை உயர்ந்ததா என்று அனைவரிலும் வியப்பை தோற்றுவித்தார்” என்று அனைத்து செய்தித்தாள்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு மகிழ்ந்தன.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று உரையாற்றிய சிகாகோ மத மகா சபையில் விவேகானந்தரின் உரை மட்டுமே அனைவரையும் ஈர்த்தது என்றால் அதற்கு சுவாமி விவேகானந்தர் பாரத தேசத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் நம்பிக்கையுமே காரணம்.