சென்னை:
போக்குவரத்துப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு ரயில்களை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசு கோரிக்கைவிடுத்தன் பேரில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
நெல்லை கோவை திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை -நெல்லை:
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு அற்ற பொதுப் பெட்டிகளுடன் கூடிய ரயில் 15-ம் தேதியும் 19-ம் தேதியும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காலை 7.40க்கு புறப்பட்டு திருச்சி, மதுரை வழியாக இரவு எட்டு மணிக்கு நெல்லையை அடையும்.
இரவு 11.45க்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் இரவு 10.10க்கு முன்பதிவற்ற ரயில் இயக்கப்படும்.
சென்னை – கோவை:
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு முழுவதும் முன்பதிவற்ற பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளது. செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்கு சென்ட்ரலில் புறப்படும் இந்த ரயில் காட்பாடி, ஈரோடு வழியாக கோவையை மாலை 4.15க்கு சென்றடையும்.
இதில் ஒரு விதிவிலக்காக நாளை ஒருநாள் திங்கள் கிழமையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அடுத்து வரும் திங்கள் கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மற்றொரு சிறப்பு ரயில் இரவு 8.30க்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு காலை 5 மணிக்கு கோவையை அடையும்.
சென்னை – திருவாரூர்:
சென்னை எழும்பூரில் இருந்து திருவாரூருக்கு சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும். எழும்பூரில் காலை 8 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30க்கு இந்த ரயில் திருவாரூரை அடையும். மறுமார்க்கத்தில் திருவாரூரில் மாலை 3.35க்கு புறப்பட்டு இரவு 10.15க்கு இந்த ரயில் எழும்பூரை அடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே சென்னையில் மின்சார ரயில் அதிகம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பணி ஓய்வு பெற்ற ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறிய அமைச்சர், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.