சென்னை:
போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கங்த்தினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி வழங்க அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு ரூ. 250 கோடி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாம். எனவே, தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.
முன்னதாக, ஒய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, ரூ 7,000 கோடி நிலுவைத் தொகையைக் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்தை துவக்கின.
இதனிடையே, போக்குவரத்துப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசு பஸ் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் மனுதாக்கல் செய்தார்.
அதில் போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது. அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இதனை அவசர வழக்காகக் கருதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், சேஷசாயி ஆகியோர் முன்பு, இன்று மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்துப் பணியாளர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும். வராதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளன.