தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளையை படுகொலை செய்ததாக மைத்துனர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில் தென்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியப்பன். JCB ஆப்ரேட்டராக பணிபுரிந்த இவருக்கு நாளை காலை திருமணம் நடப்பதாக இருந்தது.
இதையொட்டி வீட்டின் முன் பந்தல் அலங்காரம் செய்து உறவினர்களும் குழுமி இருந்தனர். திருமணம் நடப்பதற்கான அனைத்து வேளைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் முனியப்பன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதனை கண்ட குடும்பத்தினர், கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பெண் வீட்டிற்கு தகவல் தெரிவித்த நிலையில் புதுப்பெண் பெரும் சோகத்தில் மூழ்கினார்.
இதனிடையே தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மணமகன் முனியப்பனுக்கும், அவரது தங்கை கணவரான வீரசங்கிலி முருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவரை முனியப்பன் தாக்கியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த வீரசங்கிலி முருகன், மது போதையில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முனியப்பனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வீரசங்கிலி முருகனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகனை அவரது தங்கை கணவரே கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.