யெஸ் வங்கி முன்னாள் சி இ ஓ., மற்றும் நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
நிர்வாகச் சீர்கேடு, வாராக் கடன் உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கிய யெஸ் பேங்க் 5ஆம் தேதி இரவு ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ.2,450 கோடி மூலதனத்தில் யெஸ் பேங்கின் 49 சதவீத பங்குகளை தலா ரூ.2 வீதம் வாங்க உள்ளது. ஏப். 3 ஆம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யெஸ் வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் மும்பை வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த இரு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வங்கியின் நிதிப் பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ராணா கபூர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ராணா கபூரை, மும்பை அலுவலகத்திற்கு அழைத்து வந்து 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறையினரால் அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.