தமிழக பாஜக., தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இதனை தலைமையிட தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கையெழுத்திட்டு அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
தமிழக பாஜக., தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்காணா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்தப் பதவி காலியாக இருந்தது.
இதை அடுத்து தமிழக பாஜக., தலைவராக யார் நியமிக்கப் படலாம் என்று பல்வேறு ஊகங்கள் உலவின. மூத்த தலைவர்கள் சிலரின் பெயர்களும் அடிபட்டன. தமிழகத்தில் பெரும்பாலானவர்களால் நன்கு அறியப்பட்ட ஹெச்.ராஜா தலைவராவார் என்று அண்மைக் காலமாக கட்சியினரிடையே பேச்சு எழுந்தது.
இந்நிலையில் தமிழக பாஜக., தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து, பாஜக., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்தவர் முருகன்!
சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலையில் இளநிலை சட்டப் படிப்பும், சென்னை பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பும் படித்துள்ளார். 15 வருடங்களாக வழக்கறிஞராக உள்ளார். தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரை தமிழக பாஜக., தலைவராக நியமித்து தேசியத் தலைமை அறிவித்துள்ளதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பெயர் : எல்.முருகன்
ஊர் : ராசிபுரம் (நாமக்கல்)
வயது : 45
பிறந்த தேதி : 29.05.1977
பதவி : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர்
கட்சி : பாரதிய ஜனதாக் கட்சி
படிப்பு : ph.D ( in Law)
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.